அன்பானவர்களே, இன்றைக்கு, "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்" (ஏசாயா 41:15) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். அன்பானவர்களே, நீங்கள் போரடிக்கிற இயந்திரம் என்றால் என்ன? என்று ஆச்சரியப்படக்கூடும். அந்தக் காலங்களில் அந்தக் கருவி தானியங்களை, களைகளிலிருந்து, வைக்கோல், பதர் மற்றும் வேண்டாத பொருள்களிலிருந்து பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்டது. அது மிகவும் கூர்மையாக இருக்கும். அதாவது கொண்டு வரப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் பயன்படுத்தப்படக்கூடிய முழு தானியத்தை மட்டும் மறுபுறம் கொடுக்கும்.
இப்போது தேவன், "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்" என்று கூறுகிறார். அவர், உங்களை வாழ்வின் அசுத்தங்களை அகற்றும்படி வலிமையானவராக, கூர்மையானவராக மாற்றுகிறார். அசுத்தங்கள் யாவை? அவை சோதனைகள், தவறுகள் அல்லது மயக்குகிற பாவங்களாக இருக்கலாம். அவை இந்த உலகின் இன்பங்களாக, விருப்பங்களாக இருக்கலாம். ஆனால் போரடிக்கிற இயந்திரத்தைபோல, நீங்கள் நல்லதையும் கெட்டதையும் பிரிக்கக்கூடியவர்களாக இருப்பீர்கள். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது தேவன் இந்த அசுத்தங்களை கடந்து சென்று, பூரணமான, பரிசுத்த வாழ்க்கை வாழும்படி வல்லமை தருகிறார். உலகப்பிரகாரமான விருப்பங்கள், கவனத்தை திருப்பும் காரியங்கள், பாவங்களிலிருந்து விடுபட்ட வாழ்க்கை. சுத்தமான, பூரணமான, அவரது சமாதானத்தினால் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழும்படி செய்கிறார்.
இன்று தேவன் உங்களை கூர்மையாக்குகிறார். ஒரு கத்தியை நினைத்துக்கொள்ளுங்கள். மழுங்கிப்போன கத்தியை நாம் பயன்படுத்தமாட்டோம்; அது ஒன்றையும் வெட்டாது; அது பயனற்றது. அது சுத்தமான முடிவை தராது. கூர்மையான கத்தியே பொருளை தெளிவாகவும், சுத்தமாகவும் பிரிக்கும். அப்படியே இன்றைக்கு தேவன் உங்களைக் கூர்மையாக்கி, தேவையில்லாதவற்றை பிரித்துவிட்டு, சுத்தமும் முழுமையும் திருப்தியுமான வாழ்க்கை வாழும்படி செய்கிறார்.
ஜெபம்:
பரம தகப்பன், நீர் கொடுத்துள்ள வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று என்னை உம்முடைய அன்பின் கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பி, வனைந்திடும்; கூர்மையான, வலிமையான போரடிக்கும் இயந்திரமாக உருவாக்கிடும். என் வாழ்விலிருந்து எல்லா அசுத்தத்தையும் அகற்றிடும். உம்மை பிரியப்படுத்தும் பரிசுத்தமான வாழ்க்கை வாழ எனக்கு உதவும். உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னை நிரப்பட்டும்; அதன் மூலம் எது நல்லது என்றும், கேடு செய்யக்கூடியது என்றும் நான் பிரித்து, நீர் எனக்கென்று ஏற்படுத்தியுள்ள பரிபூரணத்தில் நடக்க உதவி செய்யும். என்னை உமக்கு பயனுள்ள கருவியாக உருவாக்குவதற்காக நன்றி செலுத்தி இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
போரடிக்கும் கூர்மையான இயந்திரம்
