"உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்" (நீதிமொழிகள் 28:10) என்று தேவனுடைய வாக்குத்தத்தம் கூறுகிறது. ஆம், தேவன் உங்களுக்கு ஒரு சுதந்தரத்தைக் கொடுக்க விரும்புகிறார். நீங்கள், "இந்த உலகத்தில் எனக்கு எப்படி சுதந்தரம் கிடைக்கும்? எனக்கு யாரும் எதையும் விட்டுப்போகமாட்டார்கள். என் பெற்றோருக்கு அதிக சொத்து கிடையாது. எந்த உறவினரும் என்னை குறித்து யோசிக்க மாட்டார்கள். எப்படி நான் சுதந்தரத்தை பெற்றுக்கொள்ள முடியும்?" என்று நினைக்கலாம். பயப்படாதீர்கள். வேதம், "கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்" (ஏசாயா 58:14) என்று கூறுகிறது. ஆம், இன்று, இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவையில் பலியாகக் கொடுத்ததினால் உங்களுக்கு சுதந்தரத்தை உண்டுபண்ணினார். இயேசுவிடம் இருக்கும் சுதந்தரம் அவர் வைத்துக்கொள்வதற்காக அல்ல; தம் பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கானது.
இந்த சுதந்தரத்தை யார் பெற்றுக்கொள்வார்? யாரெல்லாம் அவரை பிதாவாகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்களோ, அவருடைய இரத்தத்தால் தங்களைக் கழுவும்படி ஜெபிக்கிறார்களோ, தேவ ஆவியானவரைப் பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களே சுதந்தரத்தை அடைவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவர் தமது சுதந்தரத்தை அளிக்கிறார். நீங்கள் இயேசுவின் சுதந்தரத்தை அவரிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையை இயேசுவின் கரங்களில் கொடுங்கள். அவரே உங்களை ஆதரிப்பார். அவர் தமது சுதந்தரத்தை உங்களுக்குத் தந்து, உங்களை செழிப்பாக்குவார்.
மகாராஷ்டிராவில் லொனாவாலாவை சேர்த்த சதீஷ் ராவ் பகிர்ந்து கொண்ட அற்புத சாட்சி. அவர் பட்டப்படிப்பு முடித்த பிறகு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தை தொடங்குவதற்கு வங்கியில் கடன்பெற்றார். தொழில் சிறக்க ஆரம்பித்தது. ஆனால் கோவிட் 19 காலத்தில் தொழில் நசிந்துவிட்டது. பெரிய நஷ்டம் தொடர்ந்தது. பெருந்தொற்றுக்குப் பிறகு சதீஷ் தொழிலை மறுபடியும் ஆரம்பித்தார்; ஆனால், அது தடுமாறியது. அதற்கு பிறகு லட்சுமியை திருமணம் செய்தார். மனைவியும் அவருடைய வியாபாரத்திற்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் கடன் பெருகியது. வங்கி, கடனை திரும்ப செலுத்துவது குறித்து அவரை நெருக்க ஆரம்பித்தது. ஒருநாள் இரவு லட்சுமி ஒரு கனவு கண்டார். அதில், நான் அவர்களுக்காக ஜெபிப்பதை கண்டார். அவர்கள் அதை நம்பி கோயம்புத்தூரில் உள்ள பெதஸ்தா ஜெப மையத்திற்கு பயணச்சீட்டை பதிவு செய்தனர். அவர்களுடைய முதலாவது திருமண ஆண்டு நிறைவு ஜனவரி 12ம் தேதி. அதை அவர்கள் இயேசுவுடனும் எங்களுடனும் கொண்டாட விரும்பினர்; எங்களை ஜனவரி 15ம் தேதி சந்தித்தனர். நானும் என் மனைவி இவாஞ்சலினும் எங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்து பொருளாதார சிக்கல்களிலிருந்து அவர்கள் விடுபடவேண்டுமென ஜெபித்தோம். அவர்கள் வீடு திரும்பியதும், சூப்பர் கிட்ஸ் மழலையர் பள்ளி என்ற புதிய பள்ளியை தொடங்கினார்கள். மாணவ மாணவியர் வேகமாக சேர்ந்தனர். இரண்டே ஆண்டுகளில் அவர்கள் கடன்கள் எல்லாம் அடைந்தன. இன்று, இரண்டு தொழில்களும் நன்றாக நடக்கின்றன; எல்லா பொருளாதார சுமைகளும் அகன்று விட்டன. இயேசுவுக்கே நன்றி.
அன்பானவர்களே, தேவன் நிச்சயமாகவே உங்களுக்கு ஒரு சுதந்தரத்தை கொடுப்பார்; அதை பெற்றுக்கொள்ளுங்கள்; பாக்கியம் பெறுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, திறந்த இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். இந்த உலகம் எனக்கு ஒன்றும் தராவிட்டாலும், உம்முடைய வசனம் உமக்குள் எனக்கு சுதந்தரம் இருக்கிறது என்றும், அது ஒருபோதும் மாறாதது என்றும் கூறுகிறது. இயேசுவே, என்னை உம் பிள்ளையாக மாற்றுவதற்காக, சிலுவையில் உம்மை பலியாக கொடுத்து, உம்முடைய வாக்குத்தத்தங்களுக்கெல்லாம் சுதந்தரவாளியாக்கியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை கழுவும்; உம்முடைய பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி, உம்முடைய பூரணமான வழிகளில் என்னை நடத்தும். என்னுடைய வாழ்க்கையை, என் ஆண்டவரும் எனக்கு எல்லாவற்றையும் அருளிச்செய்கிறவருமாகிய உம்மிடம் ஒப்படைக்கிறேன். என்னை உயர்ந்த இடங்களில் ஏறியிருக்கப்பண்ணுவீர் என்று நம்புகிறேன். என் வாழ்க்கை, உம்முடைய நன்மைக்கும் உண்மைக்கும் சாட்சியாக விளங்குவதாக. எனக்கான சுதந்தரத்தை, பிறப்புரிமையாக அல்ல; குடும்ப பெயரால் அல்ல; இயேசு கிறிஸ்துவின் கிருபையால் பெற்றுக்கொண்டு, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.