அன்பானவர்களே, "உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்" (ஏசாயா 60:3 ) என்பதே தேவன் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம். இன்றைய தினம், ஒரு விசேஷித்த நாள். எங்கள் திருமண நாள். கடந்த 36 ஆண்டுகளாய் தேவன், என் அன்பு மனைவி இவாஞ்சலினுக்கு உண்மையாய் இருந்து வந்துள்ளார். ஆண்டவர், கிருபையாக எங்களை இருதயத்தில் இணைக்கப்பட்டவர்களாய், ஊழியத்தில் இணைக்கப்பட்டவர்களாய், குடும்பமாய் அவரது சித்தத்தை செய்ய இணைத்து வைத்துள்ளார். உங்கள் அன்புக்கும் ஜெபத்திற்கும் உளமார நன்றி செலுத்துகிறோம். ஆண்டவரிடத்திலிருந்து வழிகாட்டுதலை பெற்றுக்கொண்டு, எங்களை இணைத்து வைத்த, எங்கள் பெற்றோரை நாங்கள் கனப்படுத்துகிறோம். மெய்யாகவே, அவர்கள் நீதியே எங்கள் குடும்ப வாழ்க்கையின் அஸ்திபாரமாய் இருக்கிறது. இன்று நாங்கள் எங்களுக்கு அடுத்து இரண்டு தலைமுறைகள் இயேசுவுடன் நடப்பதைக் காண்கிறோம். என் தாத்தாவுடன் சேர்த்து ஐந்து தலைமுறைகளாக ஆண்டவரை பின்பற்றுகிறோம். தேவன் கிருபையாகவே இருக்கிறார்.

"எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது" (ஏசாயா 60:1) என்று வேதம் கூறுகிறது. காரிருள் பூமியை மூடினாலும், தேவன் "என் மகிமை உன்மேல் உதிக்கும்" என்று சொல்லுகிறார். அந்த தேவ மகிமை நம்முடைய குடும்ப வாழ்க்கையை மூடியிருக்கிறது. கர்த்தருடைய மகிமை இஸ்ரவேலரை வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தியதுபோல நம்மை இம்மகிமை வழிநடத்துகிறது. இயேசு தம் மகிமையை தம்முடைய முதலாம் அற்புதத்தில், தண்ணீரை ருசியான திராட்சரசமாக்கி வெளிப்படுத்தினார் (யோவான் 2:11). அவ்வாறே பரிசுத்த ஆவியானவரும் நம் வாழ்வில் ஒவ்வொரு துளி தண்ணீரையும் முன்பைக் காட்டிலும் ருசியான ரசமாக மாற்றுகிறார். ஆம், தேவ மகிமை நம்மை சூழ்ந்திருக்கிறது; இன்னும் சூழ்ந்திருக்கும்.

"கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்" (ஏசாயா 58:8) என்று வேதம் கூறுகிறது. அவர் நம் பெயரைக் காப்பாற்றுகிறார்; நம்முடைய அபிஷேகத்தை பாதுகாக்கிறார்; நம் வாழ்வில் அவரது பிரசன்னத்தை காக்கிறார்.  பிசாசும் பொல்லாத மக்களும் எங்களை பெயரை கெடுப்பதற்கு முயற்சித்தபோது, கர்த்தர் எங்கள் பிறகே நின்றார்; எங்களை தமது பிள்ளைகள் என்று கூறினார்; அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்கு எங்களை வழிநடத்தினார்; சந்தோஷத்தையும், இயேசு மாத்திரமே கொடுக்கக்கூடிய நிறைவையும் தந்து ஆசீர்வதித்தார்.

ஒரு குடும்பம் ஆசீர்வதிக்கப்படும்போது, அது தனிப்பட்ட வெற்றியல்ல; ஒரு தேசத்தின் வெற்றியாக மாறுகிறது. இயேசுவின் வெளிச்சம், பக்தியுள்ள குடும்பத்தின் ஒற்றுமையின் மூலமும், சாட்சியின் மூலமும் விளங்குகிறது. தேசங்கள் உன் வெளிச்சத்தினிடத்திற்கும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள் என்ற வசனம் நிறைவேறும் (ஏசாயா 60:3). தேவன் உங்கள் குடும்பத்திற்கும் அதே மகிமையை, ஒற்றுமையை கொடுத்து ஆசீர்வதிப்பாராக. உங்களை அதிகமாய் கனப்படுத்துவாராக; தேசத்திற்கு ஒளியாய் விளங்கப்பண்ணுவாராக; இப்போதும் எப்போதும் உங்கள் பெயரை பின்சென்று காப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, "உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்" என்ற உம் வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் (ஏசாயா 60:3 ). உம் மகிமை என் வீட்டின்மேல், என் சந்ததியிலுள்ள ஒவ்வொருவரின்மேலும் விளங்குவதாக. என் குடும்பத்தை உம்முடைய அன்பினால் இணைத்தருளும். எங்களில் நீதியை, சமாதானத்தை, நல்ல நோக்கத்தை நிலைநிறுத்தும். கிறிஸ்துவின் வெளிச்சம், எங்களுக்குள் பிரகாசித்து, விடாய்த்தவர்களையும், காணாமற்போனவர்களையும், உள்ளமுடைந்தவர்களையும் உம்முடைய கிருபைக்கு நேராக இழுக்கட்டும். எங்களை பின்னாக காக்கும் ஆண்டவரே, எங்கள் பெயர்களை, எங்கள் அழைப்பை பாதுகாத்தருளும். வறண்ட இடங்கள் எல்லாவற்றையும் சம்பூரணமாய் மாற்றியருளும். எல்லா சோதனைகளையும் சாட்சியாக மாற்றியருளும். என் குடும்பம் எப்போதும் உம்முடைய பிரசன்னத்தால் ஒளிவீசி, பரிசுத்த ஆவியின் மதுரத்தை எப்போதும் காட்டவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.