எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு ஓர் அருமையான வாக்குத்தத்தத்தை வேதத்திலிருந்து தியானிக்க போகிறோம். "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்" (கொலோசெயர் 1:27). தாவீது, தன் வாழ்க்கையில் இந்த மகிமையை அனுபவித்தான். கர்த்தாவே, நீர் என் மகிமையாயிருக்கிறீர் (சங்கீதம் 3:3) என்றும், "நீர்... மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்" (சங்கீதம் 8:5) என்றும் அவன் கூறுகிறான். எப்போது நீங்கள் அப்படிப்பட்ட மகிமையை பெற்றுக்கொள்ள முடியும்? நீங்கள் தேவனை துதிக்கும்போது, ஸ்தோத்திரிக்கும்போது தேவ மகிமை உங்களை நிரப்பும் என்று பார்க்கிறோம் (சங்கீதம் 50:23; 69:30). தேவ மகிமையினால் நிரப்பப்பட்ட பிறகு என்ன நடக்கும்? "எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்" (ஏசாயா 60:1,2).

அன்பானவர்களே, எவ்வளவு நேரம் தேவனுடைய பாதத்தில் செலவிடுவீர்கள்? நீங்கள் அவரது பாதத்தில் நேரம் செலவிடாவிட்டாமல் இந்த மகிமையான அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியாது. இந்த தெய்வீக மகிமையை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும்போது, ஆச்சரியமான காரியங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும். நீங்கள் நீதியின் விருட்சம் என்று அழைக்கப்படுவீர்கள் (ஏசாயா 61:3). "நீங்கள் ...பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்" (1 பேதுரு 4:14). நீங்கள் தேவ வல்லமையினால் நிரப்பப்பட்ட பிறகு, தேவ மகிமையால் பிரகாசிக்க தொடங்குவீர்கள். நீங்கள் அவரது தெய்வீக சமாதானத்தினால் நிரப்பப்படுவீர்கள்; அவர் நாள் முழுவதும் உங்களுக்கு முன்னே போவார். அன்பானவர்களே, மகிமையின் நம்பிக்கையான கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரா? இப்போதே உங்களை தாழ்த்தி, ஆண்டவரை நோக்கி ஜெபியுங்கள்; நீங்கள் அவரது மகிமையால் நிரப்பப்படுவீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்து எனக்குள் ஜீவிக்கிறார் என்ற மகிமையான சத்தியத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இப்போது நான் உம்மை துதித்து, ஸ்தோத்திரித்து முழு இருதயத்துடனும் உம்மை தேடும்போது, உம்முடைய தெய்வீக பிரசன்னத்தினால் என்னை நிரப்பும். உம்முடைய மகிமையின் ஆவியானவர் என்மேல் தங்கி, எல்லா இருளையும் அகற்றுவாராக. ஆண்டவரே, உம்முடைய மகிமை என்மேல் உதித்து, என்னை எழும்பி பிரகாசிக்கப் பண்ணுவீர் என்று விசுவாசிக்கிறேன். நான் நீதியின் விருட்சமாக உமக்குள் ஆழமாக வேரூன்றும்படி என்னை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டும். ஆண்டவரே, தினமும் உம் பாதத்தில் காத்திருந்து, உம்முடைய பிரசன்னம் என்மூலம் வீசும்படி செய்ய வாஞ்சித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.