அன்பானவர்களே, இன்றைக்கு ஆண்டவருடைய ஆசீர்வாதத்திற்காக அவருடைய பாதத்தில் காத்திருக்கிறீர்கள். மனமுடைந்து போகாதீர்கள். நம்பிக்கை இழக்காதீர்கள். தேவன் உங்கள் பக்கத்தில் இருக்கிறார். "அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்" (ஏசாயா 65:24) என்று அவர் கூறுகிறார். எவ்வளவு ஆறுதலான வார்த்தை இது. ஆண்டவர், நீங்கள் கூப்பிடுகிறதுக்கு முன்னே பதில் கொடுப்பேன் என்கிறார். சிலநேரம், நம்முடைய குடும்பத்திலே இப்படி நடப்பதை காணலாம். நாம் ஒரு சிக்கலான நிலையைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது அல்லது தற்செயலாக, "இப்படி இருந்திருந்தால் நன்றாக இருக்கும்," என்று கூறினால், அற்புதவிதமாக ஒரு காரியம் தோன்றும். தேவன், சிறிய விஷயங்களையும் அவ்வளவு நேர்த்தியாக ஒழுங்குபண்ணுவார்.

இந்த மாதிரியான ஆசீர்வாதத்தை தம்மை தேடுகிறவர்களுக்கு, தம் பின்னே ஓடுகிறவர்களுக்கு, தம் சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, தமது சித்தத்தின்படி வாழ்கிறவர்களுக்கு அவர் கொடுக்கிறார். தம் பிள்ளைகளை அப்படி அவர் நேசிக்கிறார். இன்றைக்கு, அப்படி வாழ்வதற்கான கிருபையை அவர் அளிக்கிறார். ஆண்டவர் உங்களை அப்படி தம் அருகில் கொண்டு வருகிறார்; நீங்கள் கூப்பிடும் முன்னரே அவர் பதிலளிப்பது போன்று கிட்டிச்சேர்க்கிறார். 

நாங்கள் நடத்தும் பிரார்த்தனை திருவிழாக்கள் ஒன்றில், ஒரு பெண் வந்தார்கள். அறிவிப்பு கொடுக்கிறவர், "உங்கள் ஜெப விண்ணப்பங்களை நாங்கள் கொடுத்திருக்கும் படிவத்தில் எழுதுங்கள்," என்று கூறினார். "இந்த எல்லா விண்ணப்பங்களும் Dr. பால் தினகரனிடம் கொண்டு வரப்படும். அவர் அவற்றுக்காக ஜெபிப்பார்." இந்தப் பெண், முழு விசுவாசத்துடன் எழுதினார். கூட்டம் முடிந்த பிறகு அவர்கள் மேடைக்கு வந்து, "நான் ஜெப விண்ணப்பம்தான் எழுதிக்கொண்டிருந்தேன். நடுவில், செய்தி வந்தது. நான் தேவனிடம் வேலை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ஆச்சரியவிதமாக, நான் விண்ணப்பம் எழுதிக்கொண்டிருந்தபோதே அழைப்பு வந்தது. தேவன் எனக்கு வேலையை கொடுத்தார். நான் என்ன எழுதிக்கொண்டிருந்தேன் என்பதை ஆண்டவர் எவ்வளவாய் பார்த்துக்கொண்டிருந்தார்!". ஆம், நீங்கள் கூப்பிடும் முன்னரே அவர் பதிலளிப்பார். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் கேட்பார்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய தயையையும் வேளையையும் நம்பி, விசுவாசமுள்ளவனா(ளா)க உம் முன்னே வருகிறேன். என்னுடைய இருதயத்தை, என் சிந்தனைகளை, மௌனமான என் கூப்பிடுதலை நீர் பார்க்கிறீர். என்னுடைய தேவைகள் எல்லாவற்றையும், நான் அவற்றை வெளிப்படுத்தும்முன்னரே நீர் அறிந்திருக்கிறீர்; நான் பார்க்கக்கூடாத வழிகளில் நீர் கிரியை செய்கிறீர். நான் உமக்குக் காத்திருக்கும்போது என் இருதயத்தை சமாதானத்தினாலும் நம்பிக்கையினாலும் நிரப்பும். உம்முடைய தெய்வீக வேளையையும் பரிபூரண திட்டங்களையும் நம்பும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தும். என் முழு இருதயத்தோடும் உம்மை தேடவும், கீழ்ப்படிதலோடு நடக்கவும், என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அன்போடு ஒழுங்குபண்ணுகிறீர் என்று நம்பவும் உதவும். ஆண்டவரே, நீர் என் பட்சத்தில் இருக்கிறீர்; எனக்கு விரோதமாக இல்லை என்ற சத்தியத்தில் நான் இளைப்பாறுகிறேன். இன்றைக்கு காணப்படுகிற, காணப்படாத உம்முடைய கிருபையை, உம்முடைய அண்மையை, உம்முடைய பதில்களை நான் இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்கிறேன், ஆமென்.