அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். ஆசீர்வாத மழையை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள். இன்றைய வாக்குத்தத்த வசனமான, "உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 31:16) என்பதை தியானிப்போம். இந்த வசனம் கூறுகிறபடி, உழைக்கிற உங்கள் கரங்களுக்கு தேவன் பலன் அளிக்கும் நேரம் இது.

தேவன் நீதியாய் நியாயந்தீர்க்கிறார். ஆனால், இந்த உலகம் அப்படியல்ல.  முதலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் பலர் வேலை பார்த்தனர். ஆனால், ஒரு மனிதர் நன்றாகவும், உண்மையாகவும் வேலை பார்த்தாலும், முதலாளி எப்போதும் அவரை சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார். ஏன்? அவரது தோற்றமும் அவர் பேசுவதும் முதலாளிக்குப் பிடிக்கவில்லை. முதலாளி எப்போதும் அவரால் எரிச்சலடைந்துகொண்டே இருந்தார். அவர் கடினமாக உழைத்தாலும் எப்போதும் கத்திக்கொண்டே இருந்தார். ஆனால் இன்னொரு மனிதர் இருந்தார். அவர் நன்றாக வேலைசெய்வதில்லை. ஆனாலும் எப்போதும் இனிமையாக செயல்படுவார். அவர் முதலாளியை நன்கு கவனித்துக்கொள்வார். ஆகவே, முதலாளி அவரை அதிகமாய் நேசித்தார்.

உலகம் அப்படித்தான் இருக்கிறது. நாம் அதிகமாக முயற்சிக்கிறோம்; ஆனால், பெரும்பாலான நேரங்களில் பலன் கிடைப்பதில்லை. நமக்கு எஜமானர் பரலோகத்தில் இருக்கிறார்; அவர் நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அதிகமாய் பலன் கொடுப்பார். அதற்காக அவரை ஸ்தோத்திரிப்போம். "அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்" (மத்தேயு 6:4) என்று கூறுகிறது. நம்முடைய பரலோக பிதாவின் குணம் அதுதான். ஆகவே, அவருக்காக உண்மையாக உழைத்திடுங்கள். உங்களால் இயன்றவரை நன்மையே செய்திடுங்கள். அவருக்கு பிரியமானபடி நடந்திடுங்கள். அவர் உங்கள் கைகளின் கிரியைகளுக்கு பலன் தருவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் செய்கிறவற்றை யார் பார்க்காவிட்டாலும், நீர் பார்த்துக்கொண்டிருக்கிறபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.  நீர் ஒருபோதும் என்னுடைய பிரயாசத்தையோ, நோக்கத்தையோ கவனிக்காமல் போகிறவரல்ல; நீர் நீதியுள்ள நியாயாதிபதி. உமக்காய் உண்மையாக உழைப்பதற்கு எனக்கு உதவும்; மனுஷரின் பார்வைக்கு அல்ல; உமக்கு மாத்திரமே பிரியமாய் நடக்க உதவி செய்யும். இந்த உலகம் நீதியற்று இருந்தாலும், உம்முடைய பலன் நிச்சயம் உண்டென்றும், உம்முடைய வேளை ஏற்றதாக இருக்கிறது என்றும் எனக்கு நினைவுப்படுத்தும். ஆண்டவரே, என் கரங்களை பெலப்படுத்தும்; என் இருதயத்தை உறுதிப்படுத்தும்; என் பிரயாசத்தின் பலனை நான் காண உதவி செய்ய வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.