அன்பானவர்களே, "உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்" (உபாகமம் 8:18)என்ற வசனத்தின்படி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்மையானதும் பரிபூரணமானதுமான எல்லா ஈவுகளும் பரத்திலிருந்து வருகிறது. "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதிமொழிகள் 10:22)என்று வேதம் கூறுகிறது. தேவனுக்கும் செல்வத்துக்கும் நல்ல பிணைப்பு உண்டு. "வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" (ஆகாய் 2:8). நீங்கள் சம்பாதித்த பிறகு, நாளின் இறுதியில் உட்கார்ந்து எவ்வளவு லாபம் கிடைத்ததென பார்க்கும்போது, தேவனை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள், "இது தேவனிடத்திலிருந்து வந்தது" என்று கூறவேண்டும். குறிப்பாக, புதிய வேலையில் முதல் ஊதியத்தை பெறும்போது, புதிய தொழிலில் அல்லது நீங்கள் செய்கிற வேலையில் முதல் லாபத்தை பெறும்போது, அதை தேவனுக்குக் கொடுக்கவேண்டும்; ஏனெனில் அவரே ஐசுவரியத்தை சம்பாதிக்கிறதற்கான பெலனை தருகிறவர்.

நீங்கள் இவ்வாறு நன்மையான காரியங்களை தேவனுக்குக் கொடுக்கும்போது, அவர் உங்கள் அன்புள்ள பிரயாசத்தை ஒருபோதும் மறக்கமாட்டார் (எபிரெயர் 6:10). கொடுங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். நன்றாக அளந்து, அமுக்கிக் குலுக்கி உங்கள் மடியிலே போடுவார். அன்பானவர்களே, ஆண்டவர் உங்களை நினைவுகூர்ந்து ஆசீர்வதிப்பாராக. அவர் ஐசுவரியத்தை சம்பாதிக்கிற பெலனை உங்களுக்குத் தருவாராக. ஆகவே, உங்கள் நேரத்தையும் பொக்கிஷத்தையும் ஆண்டவருக்குக் கொடுப்பதற்கு அர்ப்பணியுங்கள். ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்ததை அவருக்குக் கொடுக்க மறவாதிருங்கள். ஆம், நம்முடைய அன்பான ஆண்டவருக்கு சிறந்ததை திரும்ப தருவோம்; நீதியுள்ள தேவனாகிய அவர் நிச்சயமாய் நம்மை நினைவுகூர்ந்து ஆசீர்வதிப்பார். ஆண்டவர்தாமே செல்வத்தை சம்பாதிக்கக்கூடிய அளவு உங்களை பெலப்படுத்துவாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நன்மையானதும் பூரணமானதுமான எல்லா ஈவுகளையும் தருகிறவராக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் தந்திருக்கிற பெலன், ஞானம், செல்வத்தை சம்பாதிக்கிறதற்கான திறன் எல்லாவற்றுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, வெள்ளியும் பொன்னும் உம்முடையது; எல்லாவற்றையும் உம்முடைய கரங்களில் பெறுகிறோம் என்பதை ஒத்துக்கொள்கிறோம். நான் சம்பாதிக்கிற எல்லா லாபத்திலும் உம்மை நினைவுகூர்ந்து முதற்கனிகளால் உம்மை கனம்பண்ண உதவியருளும். என்னுடைய பிரயாசம் உமக்கு பிரியமானதாய் இருக்கட்டும்; சந்தோஷத்துடன் நன்றியுடனும் உமக்கு திரும்ப கொடுக்க நான் ஒருபோதும் மறவாதிருக்கட்டும். என்னுடைய கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்தருளும்; என்னுடைய பிரயாசத்தை பன்மடங்காய் பெருக்கியருளும்; என்னை மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தின் பாத்திரமாய் மாற்றியருள வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.