எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு நாம், "கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக" (2 தெசலோனிக்கேயர் 3:5) என்ற வசனத்தை தியானிப்போம். இந்த வசனத்தின்படி நாம் தேவ அன்பினாலும் கிறிஸ்துவின் பொறுமையினாலும் நிரப்பப்பட்டிருக்கவேண்டும். "அன்பை நாடுங்கள்" (1 கொரிந்தியர் 14:1) என்று வேதம் கூறுகிறது. இயேசு, தமது அன்பை சிலுவையில் நம்மீது ஊற்றினார். அவரது ஆழமான, உருக்கமான அன்பை வேதம் விவரிக்கிறது (ஓசியா 11:4). ஆகவே, ஆண்டவரை நோக்கி, உங்களை தம்முடைய தெய்வீக அன்பினால் நிரப்பும்படி கேளுங்கள். "நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" (ரோமர் 5:5) என்று வேதம் கூறுகிறது. இயேசுவும் பரிசுத்த ஆவியையும் தேவ வல்லமையையும் பெற்றிருந்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 10:38). நாமும் அவரை நோக்கிப் பார்த்து அதே அன்பை பெற்றுக்கொள்வோம்.

இரண்டாவதாக, "உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்" (லூக்கா 21:19) என்று வேதம் கூறுகிறது. ஆனால், நாம் எப்படி இந்த பொறுமையை பெற்றுக்கொள்வது? வேதம், அது தேவனுடைய வசனத்தின் மூலமாக வருகிறது என்று கூறுகிறது (ரோமர் 15:4). தினமும் தேவனுடைய வசனத்தை வாசியுங்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு வாக்குத்தத்தம் இருக்கும். தேவனுடைய வசனம் உங்களை அவருடைய அன்பினாலும் பொறுமையினாலும் நிரப்பும். ஆகவே, அன்பானவர்களே இன்று உங்கள் வாழ்க்கையை சீர்தூக்கிப்பாருங்கள்.

இந்த நாட்களில், அநேக குடும்பங்களில் பிரச்னைகள், மனச்சோர்வுகள், பிரிவினைகள் என்று எல்லாவிதமான சோதனைகளும் காணப்படுகின்றன. ஆனால், இன்றைக்கு பரிசுத்த ஆவி உங்களுக்குள் அசைவாட அனுமதிப்பீர்களா? தேவனுடைய அன்பையும் கிறிஸ்துவின் பொறுமையையும் பெற்றுக்கொள்வீர்களா? அப்போது உங்கள் வாழ்க்கை முற்றிலும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் போல மாறும். இப்போதே ஜெபித்து இயேசுவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம பிதாவே, திறந்த மனதுடன் இன்று உம்மிடம் வருகிறேன். என்னுடைய இருதயத்தை உம்முடைய பரிபூரண அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராக வழிநடத்துவீராக. ஆண்டவரே, இயேசு சிலுவையில் ஊற்றிய தெய்வீக அன்பினால் என்னை நிரப்புவீராக. பரிசுத்த ஆவியானவரே, தயவாய் உம்முடைய வசனம் சொல்லுகிறபடி இந்த அன்பு என் இருதயத்தில் நிரம்புவதாக. எல்லா சோதனையிலும் பொறுமையாகவும், சகித்துக்கொண்டும், உம்மை நம்பியும் கடந்து வர எனக்குக் கற்றுத்தாரும். உம்முடைய வேதத்தில் வேரூன்றி, தினமும் அதன் வாக்குத்தத்தங்களிலிருந்து பெலனை பெற்றுக்கொள்ள எனக்கு உதவும். என் வாழ்க்கை உம்முடைய ஆவியினால் தொடப்படுவதாக. ஆண்டவரே, என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். நான் செய்யும் எல்லா கிரியைகளிலும் இயேசுவை காண்பிக்க வேண்டுமென ஜெபிக்கிறேன், ஆமென்.