எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு நாம், "நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்" (சங்கீதம் 52:8) என்ற வசனத்தை தியானிப்போம். அன்பானவர்களே, ஆண்டவருக்கு முன்பு நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்? வேதம், "கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்" (சங்கீதம் 11:4) என்றும், "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" (1 கொரிந்தியர் 3:16) என்றும் சொல்லுகிறது. பச்சையான ஒலிவமரத்தைப் போல, தேவனுடைய வல்லமையையும், ஆசீர்வாதத்தையும் பெற்று, அவருடைய ஆலயமாக விளங்குங்கள் (2 கொரிந்தியர் 6:16; எபேசியர் 2:21). ஆம், நீங்கள் செழிப்பைக் குறிக்கும் பச்சையான ஒலிவமரமாக இருக்கலாம்.
நீங்கள், "எனக்கு சமாதானமேயில்லை; எனக்கு சந்தோஷமேயில்லை; பணமேயில்லை; எனக்கு இது இல்லை; அது இல்லை," என்று எப்போதும் முறுமுறுத்துக்கொண்டே இருக்கலாம். குடும்ப வாழ்க்கையைக் குறித்து மக்கள் இவ்வாறு முறுமுறுக்கின்றனர். ஆனால், நீங்கள் தேவனுடைய ஆலயமாகும்போது, அவருடைய செழிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள். "இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" (ஆகாய் 2:7). நீங்கள் அவருடைய ஆலயமாகும்போது, பரிசுத்த ஆவியானவர் வந்து உங்களுக்குள் வாசம்பண்ணுவார். நீங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 2ம் அதிகாரத்தை வாசித்தால், இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் யாவரும் அந்த அனுபவத்தை பெற்றதை அறியலாம். கொர்நேலியு என்ற புறஜாதி மனுஷன், இந்த தெய்வீக அனுபவத்தைப் பெற்றுக்கொண்டான் (அப். 10ம் அதிகாரம்). ஆகவே, அவர்கள் எல்லாரும் ஆவிக்குள் செழிப்பைப் பெற்றார்கள்; உலகப்பிரகாரமான வழியில் அல்ல. அன்பானவர்களே, இந்த தேவ வல்லமையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அப்போது நீங்கள் சர்வவல்ல தேவனுடைய ஆலயமாக மாறுவீர்கள். நீங்கள் தேவனுடைய வல்லமையால், அவருடைய பிரசன்னத்தால் நிரப்பப்படுவீர்கள்; அவரே உங்களுக்காக யாவற்றையும் செய்வார்; நீங்கள் அவரது நாமத்திற்கு மகிமையை கொண்டு வருவீர்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையை உங்களுக்குத் தந்து ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய சமுகத்தில் பச்சையான ஒலிவமரமாக செழிக்கும்படி வாஞ்சையுடன் உம்முன்னே வருகிறேன். எனக்குள்ளே வாசம்பண்ணும்படி நீர் தெரிந்துகொண்டதற்காக, உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்புவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, முறுமுறுக்கிற எல்லா ஆவியையும், என் வாழ்வில் காணப்படுகிற குறைவுகளையும் அகற்றி, உம்முடைய சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும், தெய்வீக செழிப்பினாலும் நிரப்பும். உம்முடைய மகிமை என்மேல் தங்கியிருக்கட்டும்; நான் செல்லுமிடமெங்கும் உம்முடைய பிரசன்னத்தை சுமந்து செல்லட்டும். கொர்நேலியுவையும் உம்முடைய சீஷர்களையும்போல நானும் உம்முடைய வல்லமையின் நிறைவை அனுபவிக்கட்டும். ஆண்டவரே, என்னை உம்முடைய மகிமைக்காக பயன்படுத்தும். நான் வாழ்கின்ற இடத்தில் ஆண்டவரின் நன்மையை இன்று காண்பேன் என்று விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.