ஃப்ரண்ட், மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்றைய வாக்குத்தத்தத்திற்காக நீங்கள் காத்திருக்கலாம். "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்." (யோவான் 10:10). இயேசுவின் இருதயம் இப்படித்தான் விரும்புகிறது. அவர் ஜீவனை, சீர்ப்படுத்துதலை, பரிபூரணத்தை தருகிறார். அந்த ஜீவன், உங்கள் குடும்ப வாழ்க்கைக்குள் வந்து எல்லாவற்றையும் உயிர்ப்பிக்கிறது. அந்த ஜீவன் உங்கள் உடல் நோயுற்றிருந்தாலும் அதற்குள் வருகிறது. அந்த ஜீவன் தோல்வியால் நிறைந்திருக்கும் உங்கள் படிப்புக்குள் வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பு நான் அகமதாபாத்திற்கு ஒரு வாலிபர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். மக்கள் உன்னிப்பாக செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென நான்கு பேர் போர்வையால் சுற்றப்பட்டிருந்த ஒரு மனிதனை சுமந்து வந்தார்கள். அவருடைய உடலில் குளூக்கோஸ் ஏற்றும் அமைப்பு பொருத்தப்பட்டிருந்தது. அவரால் உடலை அசைக்க முடியாத நிலையில், படுத்த படுக்கையாக இருந்தார். ஜெப நேரத்தில் ஆண்டவர், அவரது சுகமளிக்கும் வல்லமை அந்த இடத்தில் இருக்கிற அனைவரையும் நிரப்புமாறு ஜெபிக்க என்னை வழிநடத்தினார். நான் இயேசுவின் சுகமளிக்கும் பிரசன்னத்தை ஜெபத்தின் இறுதியில் அதிகமாக உணர்ந்தேன். அன்பானவர்களே, அந்த மனிதன் யாருடைய உதவியுமின்றி எழுந்து நின்றார். குளூக்கோஸ் ஏற்றும் அமைப்பு இன்னும் உடலில் பொருத்தப்பட்டிருந்தது. பாயிலிருந்து எழுந்து மேடைக்கு வந்தார். இயேசு தன்னை தொட்டு சுகப்படுத்தியதை தன்னால் இயன்றவண்ணம் சாட்சியாக கூறினார். அவர், "நான் படுக்கையில் இல்லை. புது ஜீவன் பெற்றேன்," என்று கூறினார். பிசாசு உங்களிடமிருந்து திருடலாம்; உங்கள் ஆரோக்கியத்தை பறித்துக்கொள்ளலாம்; இப்போதே பரிபூரண ஜீவனை தரும்படி ஆண்டவர் இங்கே இருக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, நீர் பரிபூரண ஜீவனை தருவதற்காக வந்தீர். சத்துருவானவன் என்னுடைய சுகத்தை, சந்தோஷத்தை, சமாதானத்தை, நோக்கத்தை திருட முயற்சிக்கிற வேளையில் நான் யோவான் 10:10 என்ற வாக்குத்தத்தத்தை பிடித்துக்கொள்கிறேன். நீரே சீர்ப்படுத்துகிறவர், நீரே பரிகாரி, நீரே பரிபூரண ஜீவனை தருகிறவராயிருக்கிறீர். உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமை என் உடலில், என் குடும்பத்தில், உடைந்துபோயிருக்கிற அல்லது இழந்துபோன நிலையிருக்கிற பகுதிகளுக்குள் பாய்ந்து செல்வதாக. அந்த மனிதனை படுக்கையிலிருந்து எழுப்பியதுபோல, இன்றைக்கு என்னை எழுப்பும். உம்முடைய பிரசன்னத்தால் என்னை நிறைத்து, சத்துரு அழிக்க முயற்சித்த எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். உம்முடைய வல்லமையான நாமத்தை விசுவாசித்து, புது ஜீவனைப் பெற்றுக்கொள்கிறேன், ஆமென்.