அன்பானவர்களே, இன்றைக்கு நாம், "தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்" (யாக்கோபு 4:8) என்ற வசனத்தை தியானிப்போம். ஆம், தேவன் உங்கள்மேல் கிருபையாயிருப்பதற்கும், உங்களைக் கிட்டிச்சேருவதற்கும் வாஞ்சிக்கிறார். வேதம், கர்த்தர் இஸ்ரவேலருக்கு வெகு சமீபமாயிருந்தார் என்று கூறுகிறது (உபாகமம் 4:7). அவர்கள் எப்பொழுதெல்லாம் அவரை நோக்கிப் பார்த்துக் கூப்பிட்டார்களோ, அப்பொழுதெல்லாம் அவர் சமீபமாய் வந்தார். வேதத்தில், ஆண்டவர் இயேசு, "எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று" (லூக்கா 13:34) என்று கூறுகிறார்.
பலவேளைகளில் நம் ஆண்டவர் தம் பிள்ளைகளாகிய இஸ்ரவேலரை சேர்த்துக்கொள்ள வாஞ்சையாயிருக்கிறார்; ஆனால், அவர்களுக்கோ மனதில்லாமற்போகிறது. ஒரு கட்டத்தில், அவர் ஜெபித்துக்கொண்டிருக்கிறபோது எருசலேம் நகரம் முழுவதையும் பார்த்து, அழுகிறார். அப்போது அவர் இதே வார்த்தைகளைச் சொல்லுகிறார். தம்மண்டை வராத மக்களுக்காக இயேசு அழுகிறார். அப்படியே தேவன் நீங்களும் தம்மை கிட்டிச்சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தயவாய் அவரது சத்தத்திற்குச் செவிகொடுங்கள்; அவரண்டைக்கு வாருங்கள். ஆண்டவர் இன்றைக்கும், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று அழைக்கிறார். இன்றைக்கும் தேவன் தம்மிடம் வருமாறு உங்களை அழைக்கிறார். ஆண்டவரின் அழைப்பை நீங்கள் கேட்பீர்களா? இயேசுவை கிட்டிச்சேருங்கள். இந்த உலகில் எந்த மனுஷனும் உங்களுக்கு உண்மையாய் உதவி செய்ய முடியாது.
நாம் சுயநலமிக்க உலகில் வாழ்கிறோம். உலகில் ஒவ்வொருவரும், மற்றவர்களை மறந்துவிட்டு, இன்னும் இன்னும் என்று பேராசைப்படுகிறார்கள். ஆனால், இயேசு வேறுபட்டவர். அவர் உதாரகுணமுள்ள தேவனாயிருக்கிறார்; நீங்கள் எவற்றையெல்லாம் கேட்கிறீர்களோ அவற்றை அவர் தாராளமாய் தருவார். ஆகவே, இயேசுவிடம் வாருங்கள்; உங்கள் பாரங்களை அவர் பாதத்தில் வைத்துவிடுங்கள்; அவர் உங்களை அழைக்கிறார். நீங்கள் அவரிடம் வரும்போது என்ன நடக்கிறது? "தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்" (எபிரெயர் 7:25). அவர் இரட்சிப்பது மட்டுமல்ல; தம்மிடம் வருகிறவர்களுக்காக வேண்டுதலும் செய்கிறார்.
நம் ஜெப கோபுரத்திலிருந்து ஓர் அருமையான சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அருண் வெங்கடேஷ் என்ற சகோதரர் இப்படியாய் கூறினார். அவர் பொள்ளாச்சியில் வசித்து வருகிறார். அவருக்கோ அவர் மனைவிக்கோ ஆண்டவரைக் குறித்து எதுவும் தெரியாது. பத்து ஆண்டுகள் கடந்துபோயின. அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால், இந்த சகோதரர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். அவர் தினந்தோறும் குடிப்பார். மதுபான கடையில் வேலையும் பார்த்தார். இதனால் அவரது மனைவி கோபமுற்றார்கள்; விவாகரத்து பெற்றார்கள். ஒருநாள், கணவரின் நண்பர் ஒருவர் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை அறிமுகப்படுத்தினார். அவர், அருணை ஜெப கோபுரத்திற்கு தொடர்பு கொண்டு ஜெப வீரர்களுடன் இணைந்து ஜெபிக்குமாறு உற்சாகப்படுத்தினார். அருண், தினமும் ஜெப கோபுரத்தை தொடர்புகொள்ள தொடங்கினார். ஒருநாள், அப்பாவின் அதே நண்பர், பெதஸ்தா ஜெப மையத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கே அருண் 40 நாட்கள் உண்மையாக ஜெபித்தார். 20வது நாளில் அவர் மதுப்பழக்கத்தை முற்றிலுமாக விட்டுவிட்டார். சொந்த தொழிலையும் தொடங்கினார். சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாங்கி தனியாக தொழில் செய்ய ஆரம்பித்தார். 40வது நாள், அதிசயமான காரியம் நடந்தது. அவரது மனைவி, திரும்ப அவரிடம் ஓடி வந்தார்கள்; குடும்பம் மீண்டும் இணைந்தது. இன்றைக்கு, அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்; எல்லாம் இயேசுவிடம் வந்ததால் நடந்தது. இயேசு அவர்களிடம் கிட்டிச்சேர்ந்தார்; அவர்கள் வீட்டைக் கட்டினார். அன்பானவர்களே, உங்களுக்கு அவர் அப்படிச் செய்யமாட்டாரா? நிச்சயமாக செய்வார். இன்றே இயேசுவிடம் வாருங்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்னை கிட்டிச்சேர வேண்டுமென நீர் வாஞ்சிக்கிறதற்காகவும், என்னை உம் அருகே அழைப்பதற்காகவும் நன்றி. சுயநலமிக்க இந்த உலகில், வாக்குகளை நிறைவேற்றாத உலகில் நீர் மாத்திரமே உண்மையுள்ளவராக, உதாரகுணமுள்ளவராக இருக்கிறீர். ஆண்டவரே, நான் முழு இருதயத்துடனும் உம்மிடம் ஓடிவந்து, என்னுடைய பாரங்களை, பயங்களை, தேவைகளை சமர்ப்பிக்கிறேன். ஆண்டவரே, என்னை கிட்டிச்சேருவீராக. உம்முடைய அணைப்பை நான் உணரட்டும். என்னை உம் சமாதானத்தால், அன்பினால், இளைப்பாறுதலினால் நிரப்புவீராக. இன்றைக்கு உம் அழைப்பை தெரிந்துகொண்டு, உம்மிடமாய் நடப்பதற்கு, ஒருபோதும் விலகிப்போகாமல் இருப்பதற்கு முடிவெடுத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.