"என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்" (சங்கீதம் 89:21). இது தேவன் உங்களுக்குத் தரும் வாக்குத்தத்தமாகும். ஆண்டவருடைய கை உங்களோடே உறுதியாயிருக்கும். அவருடைய புயம் உங்களைப் பலப்படுத்தும். இன்றைக்கு நான் பலவீனமாக இருக்கிறேன் என்று சொல்கிறீர்களா? உங்களால் செயல்பட இயலவில்லையா? "போதுமானவை இல்லை; போதுமான ஞானம், போதுமான வழிநடத்துதல், முன்னேறிச் செல்வதற்கு போதுமான தயவு மக்களிடம் இல்லை," என்று கூறுகிறீர்களா? ஆண்டவருடைய கரம் உங்கள்மேல் வரும். கர்த்தரின் கரம் எலியாவின்மேல் வந்தபோது, அவன் சத்துருக்களுக்கு முன்னாக ஓடினான். ஜனங்களை ராஜாவே அநீதியாய் நடத்தினாலும் இவன் ராஜாவுக்கு முன்னாக ஓடி தேசத்திற்கு ஆசீர்வாதத்தை கொண்டு வந்தான். ஆம், நீங்கள் தேவனுக்கு விரோதமாக, ஜனங்களுக்கு முன்னாக செல்வீர்கள்; ஆனாலும், தேசத்திற்கு ஆசீர்வாதத்தை கொண்டு வருவீர்கள். கர்த்தருடைய புயம், அவருடைய கரம் உங்களைப் பலப்படுத்தும்.
மீண்டுமாக, கர்த்தரின் கரம் பாருக்மேல், எரேமியாவின்மேல் வந்து சத்துருக்களிடமிருந்து அவர்களைப் பாதுகாத்தது. அவர்கள் ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தபோதிலும், அநீதியான ஜனங்கள் அவர்களைக் கொன்றுபோட விரும்பினார்கள். ஆனாலும், கர்த்தரின் கரம் அவர்களைப் பாதுகாத்தது. அதே ஆண்டவரின் கரம் உங்கள்மேல் வந்து உறுதியாயிருக்கும்; உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும். நீங்கள் முன்னேறிச் செல்லும்படியாக பலப்படுத்தும்படி ஆண்டவரின் புயம் உங்கள்மேல் வரும். நீங்கள் சேனைகளின் வழியே கடந்து செல்வீர்கள். நீங்கள் மதில்கள்மேல் ஏறுவீர்கள். தேவனுடைய கரம் விசாலமான இடத்துக்கு உங்களைக் கொண்டு வந்து நிறுத்தும். நீங்கள் எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவிப்பீர்கள்; இது தேவன் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம்.
ஆமோஸ் என்ற சகோதரர் இப்படியாய் சாட்சி கூறினார். அவர் குறுநிதி (microfinance) நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். அவர், தம் மனைவி, பிள்ளைகளுடன் வாழ்க்கையில் திருப்தியாயிருந்தார். ஆனால், திடீரென அவர் பணிபுரிந்த நிறுவனம் மூடப்பட்டது. அவர் வேலையை இழந்தார். மார்க்கெட்டிங் செய்யும் வேலையில் சேர்ந்தார். ஆனால், புதுவேலையில் அவரால் நியமிக்கப்பட்ட இலக்குகளை எட்ட முடியவில்லை. ஆகவே, பணிநீக்கம் செய்யப்பட்டார். பிறகு ரியல் எஸ்டேட் தொழிலை செய்தார்; பெருத்த இழப்பை சந்தித்தார். எட்டு மாதங்களாக அவருக்கு வேலை இல்லை. வாடகை கொடுக்க திணறினார்; பிள்ளைகளை படிக்க வைக்க இயலவில்லை. ஆகவே, கடன் வாங்கினார். அவரால் திரும்ப செலுத்த இயலவில்லை. கடும் மனச்சோர்வுக்குள்ளானார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். சூழ்நிலை மோசமானது. தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. அவர் தற்கொலை செய்வதுபற்றி யோசித்துக்கொண்டிருந்தார். அந்த நேரம் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா கடப்பாவில் (ஆந்திர பிரதேசம்) நடந்தது. அவர் கூட்டத்திற்கு வந்திருந்தார். நான், பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, "ஆமோஸ், நீங்கள் வாழ்க்கையில் கஷ்டத்துக்குள்ளாகி இருக்கிறீர்கள். இயேசு, உங்களை பெயர் சொல்லி அழைக்கிறார். உங்கள் வேதனை யாவும் மறைகிறது. தேவன், வாழ்க்கைக்கு தேவையான எல்லாவற்றையும் தருவார். அவர் உங்களை மறந்துபோகவில்லை," என்று கூறினேன். அவர் அதிர்ச்சியடைந்தார். கூட்டத்தில் வேறு யாராவது ஆமோஸ் என்ற பெயரில் இருப்பார்கள் என்று நினைத்தார். ஆனால், தேவன் தம் வாக்கை நிறைவேற்றினார். ஒரு புதிய தொழிலை தொடங்கும்படி செய்தார். அது செழித்தது. கடனிலிருந்து வெளியே வந்தார். பிறகு தன் குடும்பத்தை இயேசு அழைக்கிறார் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் சேர்த்தார். இப்போது இயேசு அழைக்கிறார் பங்காளராக இருக்கிறார்; இஸ்ரேல் ஜெப கோபுரத்தை பொருளாதார ரீதியில் தாங்குகிறார்.
தேவன், உங்களுக்கும் அப்படியே செய்வார். அவரது கரம் உங்களுடன் உறுதியாயிருக்கும்; அவரது புயம், மறுபடியும் எழும்பும்வண்ணம் உங்களைப் பலப்படுத்தும். நீங்கள் பொல்லாத மக்களுக்கு முன்பாக ஓடி, தேவ ராஜ்யத்தை ஸ்தாபிப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய கை என்னோடு உறுதியாயிருக்கும்; உம் புயம் என்னைப் பலப்படுத்தும் என்ற உம் அன்பின் வாக்குத்தத்திற்காக ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே என் பெலவீனங்கள், குறைவுகளை நீர் அறிந்திருக்கிறீர். உம்முடைய வழிகாட்டலுக்கான தேவையையும் அறிந்திருக்கிறீர். இப்போதும், நான் ஜெபிக்கும்போது தயவாய் எலியாமேல், பாருக்மேல், எரேமியாவின்மேல் வந்ததுபோல, என்மேலும் வந்தருளும். எல்லா பயத்துக்கும், எல்லா எதிர்ப்புகளுக்கும் மேலாக எழும்புவதற்கு எனக்கு உதவி செய்யும். உம்முடைய வல்லமையான கரம் தீங்கிலிருந்து என்னை பாதுகாக்கட்டும்; நீர் எனக்கு ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிற விசாலமான இடத்துக்கு என்னை கொண்டு செல்லும். நான் ஒரு நோக்கத்தோடு என்னுடைய ஓட்டத்தை ஓடவும், என்னை எதிர்க்கிறவர்களுக்கு முன்பதாய் ஓடவும், இருளில் வெளிச்சத்தைக் கொண்டு வரவும் கிருபை செய்யும். என்னுடைய பெலனாக, என்னுடைய கேடகமாக, என்னை தாங்குகிறவராக இருப்பதற்காக ஸ்தோத்திரம். உம்மேல் என் முழு நம்பிக்கையையும் வைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.