அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதியில் வந்திருக்கிறோம். நாம் திரும்பிப் பார்த்து, தேவன் அன்றாடம் நமக்குக் காண்பித்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரிக்கவேண்டும். இன்றும் கூட, அவர் உங்களுக்காக விசேஷித்த ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறார். "நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்" (ஏசாயா 65:22) என்று வேதம் கூறுகிறது. ஆம், தேவன், அவருடன் நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தை அநுபவித்து மகிழும்படி செய்யப்போகிறார். நீங்கள் செய்யும் வேலை வறண்டு போனதாக உணர்கிறீர்களா? வழக்கமான ஒன்றாக எண்ணுகிறீர்களா? நீங்கள், "இதை நான் செய்வதால் யாருக்கும் பயனில்லை... என்னுடைய சொந்த வாழ்க்கைக்கும் பயனில்லை," என்று கூறுகிறீர்களா? தேவன், அதை மாற்றுவார்.
ஓர் அமெரிக்க மனிதரின் நேர்முகப்பேட்டியை வீடியோவில் பார்த்தேன். அவர் வெற்றியடைந்தவர். அவரிடம், "எப்படி உங்களால் இவ்வளவு வெற்றி பெற முடிந்தது? நீண்ட இரவு அல்லது வாரம் முழுவதும் வேலை செய்தும், அதே மகிழ்ச்சி, அதே ஆற்றல், அதே ஊக்கத்துடன் எப்படி பணியாற்ற முடிகிறது? எப்படி அப்படிப்பட்ட மனப்பான்மையை பெறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அந்த மனிதர், "தினமும் காலையில் தேவ ஆவியானவருடன் நடக்க தவறுவதில்லை. நான் என்னுடைய பாரங்களை அவரிடம் பகிர்ந்துகொள்வேன். நான் அவரிடம் பேசிக்கொண்டே இருப்பேன்; அவர் திரும்ப என்னிடம் பேசுவார். அவர் என் ஆத்துமாவை குணமாக்குகிறார்; என் எதிர்காலத்தைக் குறித்த தரிசனத்தை, திட்டங்களை எனக்குத் தருகிறார்" என்று கூறிய அவர், "எனக்கு புதிய சிந்தனைகள், எண்ணங்கள் கிடைக்கின்றன. இரவில் வேலைகளை முடித்த பிறகு, 'ஆண்டவரே, இன்று எனக்கு சிறப்பாக உதவி செய்தீர். உமக்கு நன்றி" என்று சொல்லுவேன். எவ்வளவோ அழுத்தங்கள், பதற்றங்களின் மத்தியிலும் அவர் எனக்கு இரவில் சமாதானத்தை தருகிறார். இப்படித்தான், ஆண்டவர் நான் வெற்றி பெற்று உயர உதவினார்," என்று கூறினார். உங்கள் கைகளின் கிரியைகளையும் நீங்களும் அவருடன் நடக்கும்போது, சந்தோஷமாய் அநுபவிக்க உதவுவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எனக்கு இம்மாதத்தில் தந்த எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி செலுத்துகிறேன். என்னுடைய வேலையை வழக்கமானதாக நான் உணர்ந்தாலும், நீர் என் மூலமாக கிரியை செய்கிறீர் என்பதை உணர்கிறேன். ஆண்டவரே, இன்று உம்மிடம் என் பாரங்கள், கனவுகளோடு வருகிறேன். ஒவ்வொருநாள் காலையும் உம்முடைய ஆவியானவருடன் நடப்பதற்கு, உம்முடன் பேசுவதற்கு, நீர் பேசுவதை கேட்பதற்கு எனக்குக் கற்றுத்தாரும். புதிதான ஊக்கத்தை, புதுப்பெலனை, எல்லா காரியங்கள் மூலமும் உம்முடைய சமாதானத்தை எனக்கு தந்தருளும். உம்முடைய வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, என் கைகளின் கிரியையை நான் நெடுநாளாய் அநுபவிக்க எனக்கு உதவி செய்யும். என்னுடைய உழைப்பு, சந்தோஷத்தால், நோக்கத்தால், நிச்சயத்தால் நிறைந்திருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.