அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்" (2 சாமுவேல் 22:33)என்று வேதம் கூறுகிறது. தாவீது ராஜா பாடிய ஜெய சங்கீதம் இதுவாகும்.

குறிப்பாக, தாவீதின் யுத்தங்கள் எல்லாவற்றையும் வென்றவர் தேவனே. விசேஷமாக, தாவீதின் பெலத்த சத்துருவாகிய சவுலிடமிருந்து அவனை கர்த்தரே விடுவித்தார். ஆகவேதான் தாவீது, "வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்" (வசனம் 35)ல் கூறுகிறான். மேலும், "நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்" (வசனம் 41)ல் என்று தெரிவிக்கிறான். தேவனே யுத்தவீரனாக தாவீதை ஆயத்தப்படுத்தினார். கர்த்தரே அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அவனை பயிற்றுவித்தார். ஆகவேதான் அவன், திடநம்பிக்கையோடு, "எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்" (சங்கீதம் 3:6)என்று சொல்லுகிறான். தேவன் அவனை ஆதரித்ததாலும், ஆவிக்குரிய வழிநடத்துதலை கொடுத்ததாலும்தான் அவனால் இப்படி சொல்ல முடிந்தது. குறிப்பாக யுத்த காலங்களில் தாவீது புலம்பும்போது, கர்த்தர் அவனுக்குப் பதில் அளித்து, அவனுடன் நின்று, அவனுக்காக எல்லா யுத்தங்களையும் ஜெயித்தார். அவ்வாறே உங்களுடைய உபத்திர காலங்களிலும் நீங்கள் தேவனை நோக்கி கதறும்போது, அவர் உங்களுக்காக வருவார்; தம்முடைய வார்த்தையின் மூலம் பதிலளிப்பார். கர்த்தர், உங்களுக்காக பரிசுத்த ஆவியின் மூலமாக ஜெபிக்க எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார். அவர் தமது ஆவியின் மூலமாக உங்களோடு பேசுவார். உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர் என்பதை மறந்துபோகாதிருங்கள்.

ஆகவே, எப்போதும் தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள். உங்களை அவரது ஆவியினால் நிரப்பும்படி கேளுங்கள்; ஏனெனில் தேவனே உங்களுக்குள் வாசம்பண்ணுகிறவர்; உங்களுக்காக யுத்தங்களை நடத்துகிறவர். அப்போது நீங்கள், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று தைரியமாக சொல்ல முடியும் (பிலிப்பியர் 4:13). ஆமாம், தேவனே உங்களுக்குப் பலத்த அரணாக இருந்து, உங்கள் பாதையைச் செவ்வைப்படுத்துவார். ஆண்டவரே, நீங்கள் செய்கிற எல்லா காரியங்களையும் பெலப்படுத்துவாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு பலத்த அரணாக இருந்து, என் பாதையைச் செவ்வைப்பண்ணுகிற உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் தாவீதை பழக்குவித்ததுபோல, என் சரீரத்தை, மனதை, ஆவியை யுத்தங்களை சந்திக்க பழக்குவித்தருளும். உம்முடைய ஆவியின் மூலமாக என்னோடு பேசி, உலகத்தில் இருக்கிற எந்தக் காரியத்தைக் காட்டிலும் என்னோடு இருக்கிற நீர் பெரியவர் என்பதை நினைவுப்படுத்தும். நீர் என்னை விடுவிக்கிறவராக இருக்கிறபடியால் என் பயங்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என்னை தைரியத்தினால் நிரப்பி, உம்மேலான விசுவாசத்தில் பெருகப் பண்ணும். அதனால், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று தைரியமாக நான் அறிக்கையிடும்படி செய்யும். ஆண்டவரே, தயவுசெய்து என் பாதையைச் செவ்வைப்பண்ணும்; எனக்கு ஜெயமாக விளங்கும் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன், ஆமென்.