அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்" (ஆதியாகமம் 17:20) என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம். இந்த வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்டது. ஜாதி என்று எது குறிக்கப்படுகிறது? ஒரு தேசம் அல்லது நாடு; அங்கிருக்கும் மக்கள் அனைவரையும் குறிக்கிறது. ஆனால், தேவன், ஆபிரகாமை ஒரு தேசமாக்குவேன் என்று மட்டும் வாக்குக்கொடுக்கவில்லை; அவனைப் பெரிய தேசமாக்குவதாக வாக்குப்பண்ணினார். தேவன், இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுக்கும்போது ஆபிரகாமுக்கு சந்ததியே இல்லை. ஆனாலும், தேவன் வல்லமையான வாக்குத்தத்தத்தை அவன் வாழ்வில் உரைத்தார். எது ஒரு தேசத்தை பெரியதாக்கும்? மற்ற தேசங்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும் அளவுக்கு அது செல்வாக்காக இருக்கும்போதுதான். தன்னுடைய நிலத்தில் அதற்கு ஆஸ்தியும் அதிகாரமும் இருக்கவேண்டும். தேவனுடைய சுபாவத்தின்படி அது நீதியாகவும் நியாயமாகவும் நடக்கும்போதுதான் அது அவ்வாறு விளங்க முடியும். மிக முக்கியமாக, வானத்தின் நட்சத்திரங்களையும், பூமியின் தூளையும் போல எண்ணற்ற மக்கள் தொகை இருக்கும்போதுதான் அவ்வாறு விளங்க முடியும்.
ஆபிரகாமின் வாழ்க்கையை திரும்பிப் பார்ப்போம். தேவன், அவனுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் எல்லா பகுதிகளையும் நிறைவேற்றினார். ஆபிரகாமுக்கு அதிக செல்வாக்கு இருந்தது; அவனுக்கு அதிக ஆஸ்தி இருந்தது; அவன் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நீதியும் நியாயமுமாக வாழ்ந்தான். அவனுக்கு தேவன் கூறியபடி அநேக சந்ததியினரும் இருந்தார்கள். தேவன் ஏன் அவனை அதிகமாய் ஆசீர்வதித்தார்? ஆபிரகாம், கீழ்ப்படிந்திருந்தான்; தேவனுடைய கண்களுக்கு ஏற்றதை அவன் செய்தான். இந்த ஆசீர்வாதம் அவனுடன் நின்றுவிடவில்லை. அது, தலைமுறை தலைமுறையாக, சந்ததி சந்ததியாக, கர்த்தரை நம்பி, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்த எல்லோருக்கும் கிடைத்தது.
இப்போது அதே வாக்குத்தத்தம் உங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. தேவன், உங்களை ஆசீர்வதித்து பெரிய தேசமாக்குவார்; நட்சத்திரங்களைப் போல சந்ததியை தருவார்; மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக திகழும்படி மாற்றுவார்; நீதியாக வாழும்படி செழிப்பை தருவார். இந்த ஆசீர்வாதத்தை இன்றைக்குப் பெற்றுக்கொள்ளுங்கள்! தேவன் உங்களை பெரிய தேசமாக்குவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய உண்மையுள்ள வாக்குத்தத்தங்களுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆபிரகாமை ஒரு பெரிய தேசமாக உருவாக்கியதுபோல, என் வாழ்க்கையிலும் அதே ஆசீர்வாதத்தை வைக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். அதன் முழு சித்திரத்தையும் என்னால் பார்க்க இயலவில்லை என்றாலும், உம்முடைய வார்த்தையை நான் நம்புகிறேன். நீதியாகவும் நியாயமாகவும் நடக்கவும், உம்முடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, என் வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் உதவி செய்தருளும். மற்றவர்களின் வாழ்க்கையில் நன்மையான மாற்றங்களை உருவாக்கி ஆசீர்வாதமாக விளங்கும்படியும், நல்ல உக்கிராணக்காரராகவும், சரீரபிரகாரமான, ஆவிக்குரியபிரகாரமான சந்ததியினருக்கு உம்முடைய வெளிச்சத்தை கொண்டு செல்லவும் உதவும் பாக்கியத்தை எனக்குத் தாரும். என்னுடைய வாழ்க்கை உம்முடைய மகத்துவத்திற்கு சாட்சியாக விளங்கட்டும். உம்முடைய வாக்குத்தத்தத்தை இன்றைக்கு நன்றியுடனும் உண்மையுடனும் பெற்றுக்கொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.