எனக்கு அன்பானவர்களே, ஆண்டவர், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28)என்று வாக்குக்கொடுக்கிறார். இந்த மாதத்தில் தேவன் உங்கள் பாரங்கள் எல்லாவற்றையும் அகற்றுவார்; நீங்கள் இயேசுவிடம் வரும்போது இளைப்பாறுதல் அடைவீர்கள். ஆண்டவர், என்னிடம் தம்முடைய ஊழியர்களுக்கு இது இளைப்பாறுதலின் ஆண்டாக இருக்கும் என்று கூறியுள்ளார். நாம் எதிர்கொள்ளும் போராட்டங்களையும், தடைகளையும் தேவன் விலக்குவார்; தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கான இளைப்பாறுதலை தருவார். "உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்". "என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது" (வசனங்கள் 29, 30)என்றும் அவர் கூறுகிறார்.
தினமும் நாம், "ஆண்டவரே, என் பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும். என் கணவரை / மனைவியை, என் வேலையை, என் ஊழியத்தை கவனித்துக்கொள்ளும்" என்று ஜெபிக்கிறோம். நாம் தொடர்ந்து நம்முடைய பாரங்களை சுமக்கிறோம். ஆனால், ஆண்டவர் சாந்தமாக, "என்னுடைய நுகத்தை சுமந்துகொள்ளுங்கள்" என்று கூறுகிறார். அது என்ன பாரம்? அது பாவத்திலிருந்து ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுதல் ஆகும். "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்..." என்று வேதம் கூறுகிறது (1 தீமோத்தேயு 2:4). அதுதான் அவரது பாரம். "பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது" (யோவான் 9:4). காரிருள் பூமியை மூடுகிறது. ஆனால், வேதம், "எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்" (ஏசாயா 60:1,2) என்று கூறுகிறது. பகற்காலமிருக்குமட்டும் உலகத்தின் ஒளியாகிய இயேசுவை சுமந்து செல்லுங்கள். இயேசு, "இப்போது என்னை சுமந்து செல்" என்று கூறுகிறார். இயேசு, "என் ஊழியத்தை ஆதரி. என் வெளிச்சத்தை ஜனங்களுக்குக் கொண்டு செல்," என்று கூப்பிடுகிறார். "ஆம், ஆண்டவரே, நான் உம்மை மற்றவர்களிடம் சுமந்துசெல்வேன்," என்று கூறுவீர்களா? நீங்கள் அப்படி செய்யும்போது, உங்கள் வாழ்வில் இளைப்பாறுதல் காணப்படும்.
இயேசு, கெத்செமனேயில் இரத்த வியர்வை சிந்தினார்; இரட்சிப்பின் பாரத்தை சுமந்தார் என்று பார்க்கிறோம். சாத்தான், அவர் மனந்தளர்ந்துவிடுவார் என்று நம்பி, நின்று கொண்டிருந்தான். ஆனால், பரிசுத்த ஆவியானவர் வந்தார். உயிர்த்தெழுதல், ஜெயம் நிறைந்த மகிமையான எதிர்காலத்தை காட்டினார். இயேசு, உடனே, "உம் சித்தம் ஆகக்கடவது," என்று கூறினார். சாத்தான் முகங்குப்புற விழுந்து, "நான் முடிந்துபோனேன்," என்று கூறியிருப்பான் (லூக்கா 22:42-44). இயேசு ஜெயம்பெற்றவராய், தைரியமாய் சிலுவைக்குச் சென்றார். இன்றைக்கு அவர் பலியானதினால் இரட்சிப்பின் பாதை அனைவருக்கும் திறந்திருக்கிறது. தேவன், இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதால் அவருக்கு இளைப்பாறுதலை கொடுத்தார். நீங்கள் அவரது அழைப்புக்கு உங்களை ஒப்புக்கொடுக்கும்போது உங்களையும் எழுப்புவார். இயேசுவும் ஜனங்களின் பாரங்களை சுமந்தார். அவர் ஜனக்கூட்டத்தை பார்த்தபோது மனதுருகினார்; அவர்களை குணப்படுத்தினார்; பிசாசுகளை துரத்தினார்; குடும்பங்களை இணைத்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (மத்தேயு 9:35,36). தேவன் நீங்களும் அதே பாரத்தை சுமந்து, ஜனங்களுக்கு அற்புதத்தைக் கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறார்.
தேவ ஜனங்களை வழிநடத்தியதால் மோசே பாரமடைந்தான். அவன், "கர்த்தாவே, இது மிஞ்சின பாரமாயிருக்கிறது. என்னை கொன்றுபோடும்," (எண்ணாகமம் 11:12-15). ஊழியம் என்பது மற்றவர்களின் கண்ணீரை சுமப்பதாகும். இயேசு என் தந்தையை அழைத்தபோது, "நீ மற்றவர்களின் பிரச்னைகளை உன் பிரச்னைகளை போல கருதி அழுகிறாய். நீ அழும்போது நான் வருவேன்; உன் கண்ணீரை காண்பேன்; அவர்கள் கண்ணீரை துடைப்பேன்" என்று கூறினார். என் தந்தை மிகவும் வேதனைப்பட்டார். தேவன் அவருடைய கண்ணீரை கோடிக்கணக்கானோரை குணப்படுத்த பயன்படுத்தினார். தேவன், மோசேக்கு அபிஷேகிக்கப்பட்ட எழுபது மூப்பர்களை கொடுத்தார் (எண்ணாகமம் 11:16-25). இன்று, "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்" (அப்போஸ்தலர் 2:17) என்று வாக்குக்கொடுக்கிறார். தேவன் அந்த பாரங்களை சுமக்கவும், அற்புதங்களைச் செய்யவும் தமது ஆவியினால் உங்களை நிரப்புகிறார். இந்தப் பணியில் நீங்களும் இணைந்துகொள்ள விரும்புகிறீர்களா? ஜெப வீரராகுங்கள் அல்லது இயேசு அழைக்கிறார் ஸ்தானாபதியாகுங்கள். தன் நண்பர்களுக்காக ஜெபித்த யோபுவைப் போல இரட்டிப்பான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இயேசுவை சுமக்கும்போது, அவர் உங்கள் பாரங்களை அகற்றுவார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நான் விடாய்த்தும், களைத்தும் போயிருக்கையில் என்னை அழைக்கிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இன்று உம் முன்னே வந்து நான் சுமக்கிற எல்லா பாரங்களையும் இறக்கி வைக்கிறேன். ஆண்டவரே, அன்பு, மனதுருக்கம், மற்றவர்களின் இரட்சிப்பு என்னும் உம்முடைய நுகத்தை எடுப்பதற்கு எனக்குக் கற்றுத்தாரும். உம்முடைய கிருபையால் என்னை நிரப்பும்; என்னுடையதை அல்ல, உம்முடைய சித்தத்தை செய்யும் தைரியத்தை எனக்கு தந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, என் இருதயம் இயேசுவை போல் மனதுருக்கத்தினால் நிரம்பட்டும்; காணாமற்போனவர்களுக்கு, உள்ளமுடைந்தவர்களுக்கு, விடாய்த்துப்போனவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஊழியம் செய்ய உதவி செய்யும். நன்மை செய்வதில் நான் ஒருபோதும் சோர்ந்துபோகாதிருப்பேனாக. மற்றவர்களின் பாரங்களை சுமக்க என்னை அர்ப்பணித்திருக்கிறபடியால் நீர் வாக்குப்பண்ணியபடி இளைப்பாறுதலை எனக்கு தர வேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.