எனக்கு அன்பானவர்களே, "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" (ரோமர் 6:14)என்பதே இன்றைக்கு உங்களுக்கான வாக்குத்தத்தமாகும். பாவம் இனி உங்களை மேற்கொள்ளமாட்டாது; ஆனால், இயேசுவே உங்கள் வாழ்வின் ஆண்டவராயிருக்கிறார். ஏனென்றால், வேதம், பாவம் பெருகிய இடத்தில் கிருபை பெருகிற்று என்று கூறுகிறது. யோவான் 1:16, "அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்" என்று கூறுகிறது. பாவம் பெருகிக்கொண்டே இருக்கிறபடியால், கிருபையும் பெருகுகிறது. நம்முடைய விசுவாசத்தை அழிக்கும்படி, நம்முடைய பெலனை அழிக்கும்படி, நம்மை இயேசுவிடமிருந்து விலகச் செய்யும்படி பாவம் வந்துகொண்டே இருக்கிறது.
ஆனால், மறுபக்கம் கிருபையும் வந்துகொண்டே இருக்கிறது. ஆண்டவர், தமது கிருபையையும் இரக்கத்தையும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். நாம், அவரது இரக்கங்களால் பட்சிக்கப்படாமல் இருக்கிறோம். அவரது கிருபை காலைதோறும் புதியவைகளாக இருக்கின்றன. ஆம், தினமும் தேவன் உங்களுக்காக தமது இரக்கத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். இந்த கிருபை எங்கிருந்து வருகிறது? இயேசுவின் கிருபாசனத்திலிருந்து வருகிறது. முதல் முறையாக இருந்தால் கூட, தைரியமாக தேவனுடைய கிருபாசனத்திற்கு முன் வந்து, எங்களுக்கு கிருபை காட்டும் என்று கேட்கலாம். தேவனுடைய கிருபை வரும். அது நம்மை பாதுகாக்கிறது. நாம் இனி பாவத்திற்கு அடிமைகளாக இருப்பதில்லை. நாம் பாவத்தின் இருளை அழிப்பதின் மூலமாக அதை மேற்கொள்ள முடியும்.
நான் 18 வயதாயிருந்தபோது என் வாழ்க்கையை இயேசுவுக்கு கொடுத்தேன். நான் ஜெபித்துக் கேட்டபோது, இயேசு என் பாவங்களை தம்முடைய இரத்தத்தால் கழுவினார். ஆனால், சிறிது காலத்திற்குப் பின்னர் நான் சைக்கிளில் கல்லூரிக்கு போகும்போது, சுவரொட்டிகளை பார்க்கும்போது, தெருக்களில் ஒலிக்கும் பாடல்களைக் கேட்கும்போது, உலகத்தின் சோதனைகள் எனக்குள் வரும். அவை என் மனதை இயேசுவை விட்டு இழுத்து, உலக இச்சைகளுக்குள்ளாய் தள்ள முயற்சிக்கும். நான், "ஐயோ, நான் பெலவீனன். நான் விழுந்துபோவேனோ?" என்று அழுவேன். அந்த நேரம் பரிசுத்த ஆவியானவர் எனக்குள் எழும்புவார். அவர், "இயேசு பாவத்தின் வல்லமையை அழித்தார். அவரை துதி மகனே!" என்று கூறி, ஆண்டவரை துதிக்க வைப்பார். நவமான பாஷையை பேசும்படி செய்வார். கர்த்தரின் சந்தோஷம் என்னை நிரப்பும். புதிய ஆவி எனக்குள் வரும். நான், "பிசாசே, நீ சோதனைகளை கொண்டு வருகிறாய். இயேசுவின் நாமத்தில் நீ விலகிப்போ," என்று சொல்லுவேன். தேவ வல்லமை வந்து என்னை விடுவிக்கும். இன்று நீங்களும் விடுவிக்கப்படுவீர்கள். நீங்கள் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். பயப்படாதிருங்கள். இனி பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. இயேசு மாத்திரமே உங்கள் வாழ்க்கையின் ஆண்டவராக இருப்பார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பாவத்திற்கு என்மேல் அதிகாரமில்லை. நான் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறேன் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பாவம் என்னை அழிக்க முயற்சிக்கும்போது என்னை மீட்பதற்காக பெருகுகின்ற பரிபூரண கிருபைக்காக உம்மை துதிக்கிறேன். உம்முடைய கிருபை காலைதோறும் புதியவையாக இருக்கின்றன; நான் தைரியமாக உம்முடைய கிருபாசனத்தண்டை வருகிறேன். ஆண்டவரே, உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை கழுவும். உம்முடைய கிருபை என்னை பாதுகாக்கட்டும். உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எனக்குள் எழுந்து, என்னுடைய பெலவீனங்களிலே எனக்காக யுத்தம்பண்ணட்டும். நான், இயேசு பாவத்தின் வல்லமையை அழித்தார் என்று விசுவாசித்து, திடமான நிற்கும்படி செய்யும். இயேசு மாத்திரமே என் வாழ்வின் ஆண்டவர் என்று நான் அறிக்கை செய்கிறேன். உமது சந்தோஷத்தால் என்னை நிரப்பும்; என் ஆவியை புதுப்பியும்; நான் விடுதலையோடு நடக்க உதவி செய்யும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.