எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, நாம், "ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்" (ஆதியாகமம் 15:1) என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம். 2 சாமுவேல் 22:3ஐ வாசித்தோமானால், தாவீது இதேகாரியத்தை சொல்வதை பார்க்கலாம்: "தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சண்ணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்". அன்பானவர்களே, உங்களுக்கு இந்த அனுபவம் இருக்கிறதா? அந்த அனுபவத்தை பெற்றிருந்தீர்களானால் ஆபிரகாமையும் தாவீதையும் போல நீங்களும் பாக்கியவானாயிருப்பீர்கள். இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வது எப்படி?
நீங்கள் 2 சாமுவேல் 22:31 மற்றும் சங்கீதம் 18:30 ஆகிய வசனங்களை வாசித்துப்பாருங்கள். தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார் என்று கூறுகிறது. ஆகவே, உங்களை நம்பிக்கையை ஆண்டவர்மேல் வைத்திடுங்கள். அவரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். "ஆண்டவரே, நீரே எனக்கு எல்லாமுமாயிருக்கிறீர். நான் எந்தக் காரியத்தையும் நம்பவில்லை. நீரே என் கேடகம்," என்று சொல்லுங்கள். இவ்வாறு ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் உங்கள் கேடகமாக மாறுவார். உத்தமமாய் நடக்கிற யாவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 2:7). அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையை சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் உத்தமமான வாழ்க்கை நடத்துகிறீர்களா? ஆம் என்றால் தேவன் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார். நீதியுள்ள தேவனுக்கு முன்பாக எப்போதும் நீதியாய் நடக்க பிரயாசப்படுங்கள். அப்போது ஆண்டவர் உங்களோடு இருப்பார்; உங்கள் பலன் அளிப்பார்; எல்லா உபத்திரவங்களினின்றும் உங்களை விடுவிப்பார். இன்னொரு காரியத்தையும் வாசிக்கிறோம், அவரை நம்பி அண்டிக்கொள்ளுகிற யாவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார் (நீதிமொழிகள் 30:5). வேதம், நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று கூறுகிறது.
அன்பானவர்களே, தேவனால் எல்லாவற்றையும் செய்யக்கூடும் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? அப்போது அவர் உங்களுக்குக் கேடகமாயிருப்பார். "பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்" (எபேசியர் 6:16) என்று கூறுகிறது. ஆம், பொல்லாங்கன் உங்கள் வாழ்க்கைக்குள் இருளை கொண்டு வருவதற்கு முயற்சிக்கும்போது விசுவாசமென்னும் கேடகம் உங்களிடம் இருந்தால் ஆண்டவர் அற்புதவிதமாய் உங்களை விடுவிப்பார். இப்போதே ஆண்டவர் உங்கள் வாழ்வில் ஓர் அற்புதம் செய்வார். அவரே உங்களுக்குக் கேடகமாவார். உங்கள் பிரச்னைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்படுவீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் இருந்ததுபோல எனக்குக் கேடகமாகவும் மிகப்பெரிய பலனுமாயிருப்பதனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே எல்லாமும் என்று அறிக்கையிட்டு, நம்பிக்கை நிறைந்த இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். உம் மீது மாத்திரமே முழு நம்பிக்கையையும் வைத்திருக்கிறேன். ஆபத்துக்காலத்தில் நீரே என் அடைக்கலம்; சத்துரு அக்கினியாஸ்திரங்களை எய்யும்போதெல்லாம் நீரே என்னை காக்கிறவராயிருக்கிறீர். உமக்கு முன்பாக உத்தமமாய் நடக்க எனக்கு உதவி செய்யும். என்னுடைய விசுவாசம் உறுதியாயிருக்கட்டும்; என்னுடைய இருதயம் சுத்தமாயிருக்கட்டும். இன்று உம்மை விசுவாசிக்கிறேன்; உம்மையே நம்புகிறேன். நீரே இப்போதும் எப்போதும் என்னுடைய கேடகமாயிருக்கிறீர் என்று அறிக்கையிட்டு இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.