எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்" (எரேமியா 30:17) என்ற வாக்குத்தத்தத்தை இன்றைக்கு தியானிப்போம். அன்பானவர்களே, நீங்கள் வியாதியினால் அவதிப்படுகிறீர்களா? ஆரோக்கியத்தை இழந்து தவிக்கிறீர்களா? "என் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் இழந்துவிட்டேன்," என்று கூறுகிறீர்களா? இன்றைக்கு, அன்றாட வேலைகளை செய்வதற்குக்கூட பெலன் இல்லாமல் இருக்கிறீர்களா? ஒருவேளை தீவிரமாக வியாதிப்பட்டிருப்பதால் உங்களுக்கு அன்பானோர்கூட விலகிப்போய்விட்டார்களா? உங்கள் நற்பெயரை, சமுதாயத்தில் இருந்த மரியாதையை இழந்துவிட்டீர்களா? ஒருவேளை, மிகவும் தனிமையாக உணரலாம்.

வேதாகமத்தில், இதேபோன்று ஒரு பெண்ணை பார்க்கிறோம். அவள் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதிப்படுகிறாள். அவளைச் சுற்றிலுமிருந்தவர்கள் எல்லோரும் அவளை புறம்பே தள்ளினார்கள்; அவளை அசுத்தமானவள் என்று முத்திரை குத்தினார்கள். அவள் தன் மரியாதையை எல்லாம் இழந்துவிட்டாள். ஆனால், ஒருநாள், இயேசு தன் பட்டணத்தின் வழியாக செல்வதாக அவள் அறிந்தாள். அவள் அவரிடம், யாரையும் பொருட்படுத்தாமல், என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் ஓடிவந்தாள்; அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். யாருக்கும் அவளைத் தொடும் தைரியம் இல்லை. ஆனால், அவள் விசுவாசித்தாள். அவளுடைய விசுவாசம், அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டால்போதும், நான் குணமாவேன் என்று எண்ணியது. என்ன நடந்தது தெரியுமா? அந்த தருணமே அவள் குணமடைந்தாள்; அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது. அவள் பரிபூரணமாக்கப்பட்டாள். அவள் இழந்த எல்லாமும், நற்பெயர், சமுதாயத்தில் அவளுடைய இடம் எல்லாமும் திரும்ப அவளுக்குக் கிடைத்தது. அவளுடைய ஆரோக்கியம் திரும்ப கிடைத்தது; அவளது காயங்கள் எல்லாம் குணமாக்கப்பட்டன.

அன்பானவர்களே, இன்றைக்கு நீங்களும் எல்லாவற்றையும் இழந்துவிட்டேனென்று நினைக்கலாம். ஆனால் நீங்கள் இயேசுவைப் பற்றிக்கொண்டு, விசுவாசத்தை இழந்துபோகாமல் இருந்தால் அவர் உங்களை தொடுவார். அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமாக்கப்படுவீர்கள். அவர் உங்களுக்கு ஆரோக்கியத்தை திரும்ப பண்ணி, காயங்களை ஆற்றுவார். நீங்கள் பல ஆண்டுகள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் நற்பெயரை இழந்துபோனீர்களா? நீங்கள் தனியே இருக்கிறீர்களா? இன்றைக்கு தேவன் எல்லாவற்றையும், உங்கள் ஆரோக்கியத்தை திரும்ப தருவார். அவர் பெரிய பேரை சமுதாயத்தில் மீண்டும் தருவார்; தாமே உங்கள் பரிகாரி என்று காட்டுவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வேதனையை, என்னுடைய பாடுகளை நீர் அறிந்திருக்கிறீர். நான் இருக்கிற தனிமையை, யாரும் பார்க்க முடியாத காயங்களை நீர் அறிந்திருக்கிறீர். ஆனால் இன்று உம் வஸ்திரத்தை தொட்ட பெண்போல உம்மிடம் விசுவாசத்தோடு வருகிறேன். உம்முடைய ஒரே ஒரு தொடுதல் என்னை பரிபூரணமாக்கும் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, என் சரீரத்தை, இருதயத்தை, ஆவியை தொட்டு சீர்ப்படுத்தும். வாழ்க்கை தந்திருக்கிற எல்லா காயங்களையும் மாற்றும். என்னுடைய நற்பெயரை, சமாதானத்தை, பெலனை திரும்ப தந்தருளும். இப்போதே உம்முடைய சுகமளிக்கிற வல்லமை புறப்படட்டும்; நீரே என் பரிகாரி என்பதை என்னைச் சுற்றிலுமிருக்கிறவர்கள் அறிந்துகொள்ளட்டும். நீரே பரம வைத்தியர் என்று நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.