ஃப்ரண்ட், இன்று காலையிலும் உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்" (நெகேமியா 8:10) என்ற வசனத்தின்மூலம் சந்தோஷமாயிருப்பதை குறித்து உங்களோடு பேசுகிறேன். ஆம், ஒவ்வொருமுறை இந்த வசனத்தை நான் வாசிக்கும்போதெல்லாம் ஆழ்ந்த சத்தியம் எனக்கு நினைவுக்கு வருகிறது. மக்கள் அடிக்கடி, "எப்படி உங்களால் நேர்மறையாக இருக்க முடிகிறது?" "எப்படி இவ்வளவு விமர்சனங்கள் மத்தியில் புன்னகைக்க முடிகிறது?" என்று கேட்கும்போது, "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்," என்பதே என்னுடைய ஒரே பதிலாக இருக்கிறது. உண்மையில் நான் வாழ்க்கையில் அதை அனுபவித்து அறிந்திருக்கிறேன்.

ஆனால், நம்முடைய தினசரி பெலனாயிருக்கும் இந்த சந்தோஷத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது? சந்தோஷத்தை தேடுவதும், மன அழுத்தத்தோடு இருக்கும்போது இளைப்பாறுதலை தேடுவதும் இயற்கைதான். ஒருவேளை, நீங்கள் வேலை அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை, உங்கள் உறவினர்கள், குடும்பத்தினரின் வார்த்தைகள் இருதயத்தில் பாரமாயிருக்கலாம். உங்கள் பொருளாதாரம், வேலை அல்லது வியாபாரம் எல்லாவற்றையும் நசுக்கினாற்போல இருக்கலாம். நீங்கள் இளைப்பாறுதலுக்காக ஏங்கலாம். பெரும்பாலும் நண்பர்களோடு, பொழுதுபோக்கி உற்சாகமடைவதற்கு தேடலாம். ஆனால், இயல்புக்கு நாம் திரும்பியதுமே, மன அழுத்தம் ஒட்டிக்கொண்டிக்கலாம். அழுத்தம் நம்மை தொடர்ந்து கீழே இழுக்கலாம். அப்படியானால், நாம் எப்படி நேர்மறை எண்ணத்தோடு இருக்க முடியும்? நம்முடைய போராட்டங்களுக்கு நடுவில் நாம் எப்படி உண்மையான பெலனை பெற்றுக்கொள்ள முடியும்? தினந்தோறும் காலையில் தேவன் தரும் சந்தோஷத்தினால் மட்டுமே அது கூடும். நாம் தினமும் காலையில் அவராடு இணைந்திருக்கும்போது, அவருடைய வசனத்தை வாசித்து, ஜெபத்தில் அவரோடு பேசும்போது, அந்த நாளுக்கு வேண்டிய வழிகாட்டுதலை அவர் தருவார். நம் ஆத்துமாவை போஷிப்பார்; நம் வாழ்க்கைக்கு செய்யவேண்டிய அடுத்தக் கட்டத்தைக் காட்டுவார்.

'எவ்வளவோ காலத்திற்கு முன்பே வேதாகமம் எழுதப்பட்டுவிட்டதே, இக்காலத்திற்கு அது எவ்வாறு பொருந்தும்?' என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்போது அவரது வசனம் ஜீவனோடு, செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  தேவன், இப்போது அதன் மூலமாய் பேசுகிறார்; உங்களை வழிநடத்துகிறார். தேவன் உங்களுக்கு தருகிறவை உயர்வோ, தாழ்வோ எதுவாக இருந்தாலும் தேவன் உங்களை வெளியே கொண்டு வந்து வெற்றியை நோக்கி நடத்துவார் என்று அறிவதால், திருப்தியடைவீர்கள். "என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:11-13).  

ஆகவே, ஃப்ரண்ட், ஒவ்வொரு நாள் காலையும் இந்த சந்தோஷத்தை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். அந்த மகிழ்ச்சியே உங்கள் பெலனாயிருக்கும்; எந்த சவாலையும் மேற்கொள்ள உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும். தேவனுடன் இந்தத் திடநம்பிக்கையை சுமந்து செல்லுங்கள். அவர் எல்லாவற்றின் மத்தியிலும் உங்களோடு இருப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மிடமிருந்து நான் பெற்றுக்கொள்ளும் சந்தோஷத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அனுதினமும் கிடைக்கிற பரிபூரண மகிழ்ச்சிக்காக உம்மை துதிக்கிறேன். ஆண்டவரே, இந்த வாழ்க்கையின் நடுவில், தினசரி வேலை அழுத்தத்தின் மத்தியில் உம்மையே பார்க்கிறேன். ஒவ்வொரு நாள் காலையும் உம் வசனத்தால், உம் சமாதானத்தால், உம் மகிழ்ச்சியால் என்னை நிரப்பும். உம்முடைய சந்தோஷம் எல்லா பாரங்களுக்கும் மேலாக எழும்புவதாக; என் மனதிற்கு அமைதியையும் பெலனையும் கொண்டு வருவதாக. மிகுதியோ, தேவையோ எந்தச் சூழ்நிலையிலும் மனரம்மியமாயிருக்க எனக்குப் போதித்தருளும். என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு என்று விசுவாசத்துடன் அறிக்கை செய்கிறேன். எப்போதும் என்னோடு இருக்கிறபடியினால் உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.