"கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்" (ஏசாயா 62:4) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். இந்த வசனம், உங்கள் நிலை பாழாகிப்போயிருக்கிற தருணங்களில், ஆஸ்திகள் ஒன்றுமில்லாத நிலையில் கர்த்தர் உங்கள்மேல் பிரியமாயிருக்கிறார் என்று கூறுகிறது. அவர் எல்லாவற்றையும் திரும்ப தருகிற தேவனாயிருக்கிறார்.
ஆம், நீங்களும் நானும் இழந்தவற்றை, திரும்ப அளிக்கிற தேவனை சேவிக்கிறோம். யோபுவின் வாழ்க்கையைப் பார்த்தீர்களானால், வேதம், யோபு தன் நண்பர்களுக்காக ஜெபித்தபோது, கர்த்தர் அவன் இழந்தவற்றையெல்லாம் இரட்டிப்பாக திரும்ப கொடுத்தார் என்று கூறுகிறது. அவர் உங்களுக்கும் அப்படியே செய்வார்.
வாழ்க்கையில் எல்லாமுமே ஆசீர்வாதமாக மாறும். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்கிறீர்களோ, சகல ஆசீர்வாதங்களின் தேவன் அதை வர்த்திக்கப்பண்ணுவார். ஆகவே, இப்போது அவருக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் இருதயத்திலிருந்து, "இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம். சகல ஆசீர்வாதமும் உமக்குள் இருக்கிறது," என்று சொல்லுங்கள். இயேசுவின் பரிபூரணத்தினால், நீங்கள் கிருபையின்மேல் கிருபை பெறுகிறீர்கள். ஒரு மொழிபெயர்ப்பிலே ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவேதான், வேதம், "கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்" (சங்கீதம் 115:14) என்று கூறுகிறது. அன்பானவர்களே, அவர் நிச்சயமாகவே உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் அப்படியே செய்வார்.
ரூர்கேலாவை சேர்ந்த அனிமா என்ற சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள், "நான் சிறுவயதிலே சராசரி மாணவியாகவே இருந்தேன். அப்போது என் பெற்றோர் என்னை இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்தனர். ஆண்டவர் என் படிப்பை ஆசீர்வதித்தார். நான் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் தர மதிப்பெண்கள் பெற்றேன். நான் முதுநிலைப் படிப்பை முடித்தேன். தேவன் கிருபையாக ஒவ்வொரு கட்டத்திலும் என்னோடு இருந்தார். பிறகு, ரூர்கேலா ஜெப கோபுரத்தில் UTurn கூட்டத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அங்கு இயேசு அழைக்கிறார் வேலைவாய்ப்பு திட்டத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். தேவன், அரசாங்கத்தில் வருவாய் துறையில் எனக்கு வேலை கொடுத்தார்," என்று கூறுகிறார்கள். நம் தேவன் எவ்வளவு பெரியவர்! அவர் உங்கள் வாழ்க்கையைக் கட்டுவார்; உங்கள் பாழ்க்கடிப்புகளை அகற்றுவார்; உச்சிதமான ஆசீர்வாதங்களை உங்களுக்குத் தருவார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. கர்த்தர் உங்கள்மேல் பிரியமாயிருக்கிறார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, மாறாத உம்முடைய அன்புக்காகவும், தவறாத உம்முடைய வாக்குத்தத்தங்களுக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பாழான நாள்களிலும் உம்முடைய பிரியம் என்மேல் இருக்கிறது; அது ஒருபோதும் மாறுவதில்லை. நீர் சீர்ப்படுத்துகிற தேவனாயிருக்கிறீர்; இழந்தவையெல்லாவற்றையும் திரும்ப தருகிறீர்; துக்கம் எல்லாவற்றையும் ஆசீர்வாதமாக மாற்றுகிறீர். உம்முடைய வார்த்தையைப் பற்றிக்கொள்கிறேன்; யோபுவுக்கு நீர் செய்ததை எனக்கும் செய்வீர் என்று விசுவாசிக்கிறேன். என் கையின் பிரயாசங்களையெல்லாம் வர்த்திக்கப்பண்ணும்; மற்றவர்களுக்கு நான் செய்கிறவை உமது கிருபையால் பன்மடங்காக பெருகட்டும். இயேசுவே, நீரே ஆசீர்வாதமாயிருக்கிறீர்; உமக்குள் நான் கிருபையின்மேல் கிருபையை பெருகிறேன். என் வாழ்க்கையை உமது பூரண திட்டத்தின்படி நீர் நிலைப்படுத்தி கட்டுவீர் என்ற நிச்சயம் எனக்கு இருக்கிறது என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.