அன்பானவர்களே, ஆண்டவர், "துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்" (நீதிமொழிகள் 3:33)என்ற வசனத்தின்படி உங்களை ஆசீர்வதிப்பாராக. அநேக நீதிமொழிகள், நீதிமான்களுக்கு வரும் நன்மையைக் குறித்தும் துன்மார்க்கருக்கு வரும் தீங்கைக் குறித்தும் கூறுகின்றன. வேதம், "நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்" (நீதிமொழிகள் 13:25)என்றும், "வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்" (நீதிமொழிகள் 21:20)என்றும் சொல்லுகிறது. உலகமும் நீதிமானுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் என்று கூறுகிறது. ஆண்டவர், தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறார்; பெருமையுள்ளவர்கள்மேல் கோபங்கொள்கிறார். தாவீது, கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தியபடியினால், தேவன் அவனை புல்வெளியிலிருந்து, ஆடுகளை மேய்த்த இடத்திலிருந்து அழைத்துச் சென்று இஸ்ரவேலை ஆளுகிறவனாக வைத்தார் (2 சாமுவேல் 7:8). தாவீது, "கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?" என்று ஜெபித்தான் (2 சாமுவேல் 7:18). கர்த்தர், தாவீதையும் அவன் வீட்டாரையும் நினைத்தருளி ஆசீர்வதித்தார்.
தாவீதைப்போல கர்த்தருடைய பெட்டி மூன்று மாதங்கள் இருந்த ஓபேத்ஏதோமின் வீட்டையும் கர்த்தர் ஆசீர்வதித்தார் (2 சாமுவேல் 6:11). இயேசுவை எப்போதும் ஏற்றுக்கொள்ளும் மார்த்தாளின் வீட்டையும் ஆண்டவர் ஆசீர்வதித்தார். அவள் தன் வீட்டை அவருக்கு திறந்துகொடுத்திருந்தாள்; இயேசு அடிக்கடி அங்கே சென்றார். அவளுடைய வீடு, இனிய இல்லமாயிற்று. பக்தியாக வாழ்கிறவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். தேவனால் மாத்திரமே வீடு என்னும் கட்டடத்தை இல்லமாக்க முடியும். அவர்தாம் மெய்யாய் ஒரு வீட்டைக் கட்டுகிறவர்.
அன்பானவர்களே, உங்கள் வீட்டுக்குள்ளும் தேவன் நுழைவதற்கு அனுமதியுங்கள். அவருடைய வசனங்களை உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்; அவருக்கு முன்பாக தாழ்மையாய் இருங்கள். தாவீதைப்போல, உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்; ஆண்டவர் உங்கள்பேரில் பிரியமாயிருப்பார்; உங்களையும் உங்கள் வீட்டாரையும் ஆசீர்வதிப்பார். "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31)என்று வேதம் கூறுகிறது. தேவன், உங்கள் வீட்டை ஆசீர்வதிக்க தொடங்கும்போது, நீங்களும் தாவீதைப்போல, "கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?" என்று கூறுவீர்கள். ஆண்டவர், நிச்சயமாகவே உங்களை பன்மடங்காய் ஆசீர்வதிப்பார்; உங்கள் வீடு உண்மையாகவே இனிய இல்லமாக மாறும்.
ஜெபம்:
எங்கள் அன்புள்ள தகப்பனே, நீதிமானின் வீட்டை ஆசீர்வதிப்பேன் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, இன்று என்னுடைய இருதயத்தையும் வீட்டையும் உமக்கு திறந்து தருகிறேன். வந்து எனக்குள் வாசம்பண்ணும். என்னுடைய வீட்டை, உம்முடைய பிரசன்னம், உம்முடைய சமாதானத்தினால், அன்பினால், ஆசீர்வாதத்தினால் நிறைந்ததாக மாற்றுவதாக. தாவீதைப்போல உமக்கு முன்பாக என்னை தாழ்த்துகிறேன். என்னுடைய பாவங்களை அறிக்கையிடுகிறேன்; என்னை சுத்திகரித்து, உமக்கு முன்பாக ஏற்றவனாக மாற்றும். தாவீது, ஓபேத்ஏதோம், மார்த்தாள் இவர்களின் வீடுகளை நீர் ஆசீர்வதித்ததுபோல, என்னுடைய வீட்டையும் நினைவுகூர்ந்து உம்முடைய தயையை எங்கள்மேல் பொழிந்தருளும். உம்முடைய வார்த்தை என் வீட்டில் இருப்பதாக. என் வீட்டார் அனைவரின் இருதயங்களும் உம்மை விசுவாசித்து, இரட்சிக்கப்படுவதாக. என்னுடைய வீடு உண்மையிலேயே இனிய இல்லமாக மாறவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
இனிய இல்லறம்
