அன்பானவர்களே, இன்றைய தினம் நம்பிக்கையின் நாளாகும். தேவன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்; உங்களை விட்டு விலகமாட்டார்; அவர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று நம்புங்கள். "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்" (எபிரெயர் 10:38) என்ற வாக்குத்தத்தம் கூறுகிறபடி இந்த நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளுங்கள். தேவனுடைய நீதிமான், விசுவாசத்தினால் மட்டுமே பிழைப்பான். இந்த உலக ஜனங்கள் தாங்கள் பார்க்கிறவற்றை கொண்டே, தங்களைச் சுற்றி நடக்கிறவற்றைக் கொண்டே வாழ்கிறார்கள். ஆகவே, அவர்களுடைய உணர்வு, சூழ்நிலைக்கு தக்க மாறுகிறது. சில நேரங்களில் அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்; மற்ற நேரங்களில் சலிப்புடன் இருக்கிறார்கள்; மிகவும் அழுத்தத்துடன் அடுத்து என்ன செய்வது என்ற நிச்சயமில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், தேவன், தம்முடைய பிள்ளைகளாகிய நாம் சூழ்நிலைகளின் அடிப்படையில் அல்ல, நாம் எதைப் பார்க்கிறோமோ அல்லது எதைப் பிடித்திருக்கிறோமா என்பவற்றைக் குறித்து அல்ல; தாம் எப்போதும் நல்லவர்; உண்மையுள்ளவர்; வாக்குத்தத்தங்களை மாறாமல் காக்கிறவர் என்பதை கற்றுத்தருகிறார். நீதிமான் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை என்ற இந்த சத்தியத்தை உறுதியாக நம்பினால் போதும்.
ஒருமுறை ஒரு நாயின் உரிமையாளர் அதை காரில் விட்டு விட்டு ஒரு கடைக்குள் நடந்து சென்றார். அந்த நாய், கீழ்ப்படிதலுடன் காருக்குள் பொறுமையாக காத்திருந்தது. உரிமையாளர் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துதான் திரும்பி வந்தார். அந்த நாள் ஜன்னலை பிறாண்டாமல், கதவினை ஆட்டாமல் அமைதியாக, தன் எஜமான் வரும் வரைக்கும் அமர்ந்திருந்தது. அந்த நாயின் பொறுமையை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்; அதற்கு தன் எஜமான் திரும்பி வருவார்; தன்னை கைவிடமாட்டார் என்பது தெரிந்திருந்தது. அன்பானவர்களே, தேவன், நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்; விட்டுவிலகமாட்டார் என்று நம்பி, நாம் எவ்வளவு விசுவாசமாயிருக்கவேண்டும்? தேவன், உங்கள் விசுவாசத்தை கனப்படுத்துவார். வேதம், விசுவாசம் தேவனுடைய வசனங்களை கேட்பதால் வரும் என்று சொல்லுகிறது. ஆகவே, தினமும் வசனத்தை கேட்பதன் மூலம் விசுவாசத்தை புதுப்பித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் விசுவாசத்தில் திடமானவர்களாக, அசைக்கமுடியாதவர்களாக வளருவீர்கள். ஆண்டவர், தினமும் பெரிய காரியங்களை வாக்குப்பண்ணுகிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை விட்டு விலகாத, என்னை ஒருபோதும் கைவிடாத உண்மையுள்ள தேவனாக நீர் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாழ்வில் நிச்சயமில்லாதவையாக நான் உணர்கிற தருணங்களில், ஆண்டவரே, நான் காண்கிறவைகளால் அல்ல, உம்முடைய சத்திய வார்த்தையின்படியே பிழைத்திருக்கிறேன் என்பதை நினைவுப்படுத்தும். நாள்தோறும் உம்முடைய அன்பின் வாக்குத்தத்தங்களால் என் விசுவாசத்தை திடப்படுத்தும். சூழ்நிலைகளை அல்ல; உம் மீதே கண்களை பதித்திருக்க எனக்கு உதவும். வாக்குத்தத்தத்தை காக்கிற தேவனாகிய உம்மையே என் இருதயம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.