அன்பானவர்களே, "நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்" உபாகமம் 28:3. தேவன், நீங்கள் செல்லுமிடங்களிலெல்லாம் உங்களை ஆசீர்வாதமாக வைப்பார். நீங்கள் இருக்குமிடம் ஆசீர்வாதத்தை கொண்டு வராது; உங்கள் இருதயத்திற்குள் இருக்கும் இயேசுவின் பிரசன்னமே ஆசீர்வாதத்தை கொண்டு வரும். பலவேளைகளில், மக்கள், "நான் இங்கு வாழவேண்டுமா? என் வீட்டருகே எதுவும் என்னை சேதப்படுத்துமா?" என்று கேட்கிறார்கள். அப்படி இல்லை. உங்களுக்கு இயேசுவே வேண்டும். அவர், "நான் உன் இருதயத்தை, உன் சரீரத்தை என் ஆலயமாக மாற்றுகிறேன். உன் இருதயத்தின் வாசலருகே நின்று தட்டுகிறேன். நீ என் சத்தத்தைக் கேட்டு, 'இயேசுவே, உள்ளே வாரும்' என்று சொல்வாயானால், நான் வந்து உன்னுடன் போஜனம் பண்ணுவேன்," என்று கூறுகிறார். அதுவே இயேசுவின் இருதயம். உங்கள் குடும்பத்தில், உங்கள் தனி வாழ்க்கையில் எல்லாவற்றிலும் அவர் ஈடுபட விரும்புகிறார். இயேசு அங்கே இருக்கும்போது, அவரது ஆசீர்வாதமும் இருக்கும். நீங்கள் செய்கிற எல்லா காரியமும் ஆசீர்வதிக்கப்படும்; உங்களுக்கு இருக்கிற எல்லாமும் ஆசீர்வதிக்கப்படும்; உங்களுடன் இருக்கிற எல்லோரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். வேதம், தேவன் ஓபேத்ஏதோமையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று கூறுகிறது. ராஜாவும் அதைக் கேள்விப்பட்டான். உங்கள் குடும்பமும் அப்படியே இருக்கும். ஆண்டவர் வந்து எல்லாவற்றையும் செய்வதற்கு ஆயத்தமாயிருக்கிறார். உங்களுக்காக யாவற்றையும் அவர் செய்து முடிப்பார். நீங்கள் பட்டணத்தில் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள். நீங்கள் வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள். தேவன், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தேசத்தில் உயர்ந்த ஸ்தானங்களுக்கு உயர்த்துவார். அவர் தமது பரிசுத்த ஆவியின் மழையை உங்கள்மேல் பெய்யப்பண்ணுவார். பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
கவிபிரியா என்ற சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் குழந்தையாயிருந்தபோதே அவர்கள் தந்தை இறந்து விட்டார். கிராமத்தில் அவர்கள் அம்மாதான் அவர்களையும் அவர்கள் தம்பியையும் வளர்த்தார்கள். படிப்பதற்காக விடுதிக்கு அவர்களை அனுப்பி வைத்தார்கள். குடும்பத்தினர் அதற்காக அவர்களை குறைகூறினார்கள். அப்போதுதான், அவர்கள் இயேசு அழைக்கிறார் கூட்டத்திற்கு வந்தார்கள். நான் அங்கே மாணவர்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் பாட்டி அவர்களை இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்திருந்தார்கள். தேர்வு வந்தது. அவர்கள் 447/500 மதிப்பெண்கள் பெற்றார்கள். பள்ளியில் முதலிடம் கிடைத்தது. அவர்கள் 12ம் வகுப்பு முடித்தார்கள். பிறகு பி.ஏ., எம்.ஏ., படித்தார்கள். படிப்புக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. இப்போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். எங்கிருந்தோ அவர்களை தேவன் உயர்த்தினார். பட்டணத்தில் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்; கிராமத்தில் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். இப்போது தன் கிராமத்தில் உள்ள பல பிள்ளைகளுக்கு அவர்கள் ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். தேவன் உங்களையும் ஆசீர்வாதமாக வைப்பார். நீங்கள் எங்கு சென்றாலும் செழிப்பீர்கள். "சின்னவன் ஆயிரமாவான்". நீங்கள் ஆயிரமாவீர்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, பட்டணத்திலும் ஆசீர்வாதமாயிருப்பேன்; வெளியிலும் ஆசீர்வாதமாயிருப்பேன் என்று வாக்குக்கொடுப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆசீர்வாதங்களுக்கும் என்னுடைய சூழ்நிலைகளுக்கும் தொடர்பில்லை; என் வாழ்க்கையில் காணப்படும் உம்முடைய பிரசன்னமே ஆசீர்வாதத்தை தரும் என்று அறிந்து களிகூருகிறேன். ஆண்டவர் இயேசுவே, இன்று என் இருதயத்திற்குள் வாரும். எனக்கு எல்லாமுமாக இருந்தருளும். எனக்குள் வாசம்பண்ணும். உம்முடைய தயவு எனக்குக் கேடகமாகட்டும். இப்போது நான் இருக்கும் நிலை ஒரு பொருட்டல்ல; உம்முடைய மகிமையே என்னை பிரகாசிக்கப்பண்ணும் என்று நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். எனக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்கப்போவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் எங்கே இருந்தாலும் அங்கே நீர் என்னுடன் இருப்பதால் நான் செழிப்பேன் என்ற நிச்சயத்திற்காக நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.