அன்பானவர்களே, ஆண்டவர்தாமே, "உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்" (சங்கீதம் 81:16) என்ற வசனத்தின்படி உங்களை ஆசீர்வதிப்பாராக. எவ்வளவு அன்பானவர் நம் தேவன்! ஈசாக்கு, யாக்கோபை தேவன் உனக்கு வானத்தின் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து ஆசீர்வதிப்பாராக  என்று ஆசீர்வதித்தான்(ஆதியாகமம் 27:28). நம்முடைய பரம தகப்பனின் இருதயம் அவ்வாறே நம்மை ஆவிக்குரியவிதமாகவும், சரீரப்பிரகாரமாகவும் பரிபூரணமாக ஆசீர்வதிக்க விரும்புகிறது.

யோவான் 21ம் அதிகாரத்தில், பேதுருவும் இன்னும் சில சீஷர்களும் மீன் பிடிப்பதற்காகச் சென்றார்கள். தங்களால் முடிந்த அளவு அவர்கள் முயற்சி செய்தார்கள். இரவெல்லாம் பிரயாசப்பட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், விடியற்காலமானபோது இயேசு கரையிலேயே நின்றார். அவர், "பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு அப்பத்துடன் மீன் ஏதாகிலும் இருக்கிறதா?" என்று கேட்டார். அவர்கள், "இல்லை" என்றார்கள். அவர், "உங்கள் படகின் வலப்புறம் வலையைப் போடுங்கள். ஏதாகிலும் கிடைக்கும்," என்று கூறினார். அவர்கள் கீழ்ப்படிந்தபோது, வலை நிறைய 153 பெரிய மீன்களைப் பிடித்தார்கள். அவர்கள் கரைக்கு வந்தபோது, கரி நெருப்பு போடப்பட்டிருப்பதையும், மீனும் அப்பமும் தயாராக இருப்பதையும் கண்டார்கள். இயேசு அவர்களிடம், "பிள்ளைகளே, வந்து சாப்பிடுங்கள்," என்று கூறி, அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே செய்தார். இயேசு, ஏற்கனவே மீன் இல்லை என்று அறிந்திருந்தாலும், "பிள்ளைகளே, மீன் ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டார். ஏன்?
அவருடைய இருதயம் எப்போதும் நம்மேல் உருக்கமாயிருக்கிறது. வாழ்க்கையில் எல்லாமே முடிந்துபோயிற்று என்பதுபோல் தோன்றினாலும், இயேசு, விசேஷித்த ஒன்றை உங்களுக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார். இன்றும், இயேசு, "சாப்பிட ஏதாவது இருக்கிறதா, என் பிள்ளையே?" என்று விசாரிக்கிறார். அவர் உங்கள்மேல் நினைவாயிருக்கிறார். அவர் உச்சிதமான கோதுமையினால் உங்களைப் போஷிக்கவும், கன்மலையின் தேனினால் திருப்தியாக்கவும் விரும்புகிறார்; எதிர்பாராத இடங்களிலிருந்து ஆசீர்வாதம் வரும். உங்களை விசாரிக்கிற இரட்சகரிடத்தில் உங்கள் வாழ்க்கையை ஒப்படைப்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள இயேசுவே, என்மீது கரிசனையுள்ள அன்பான தேவனாக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. நான் வெறுங்கையாய் வந்தாலும், நீர் எனக்கென்று ஓர் ஆசீர்வாதத்தை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறீர். நீர் உச்சிதமான கோதுமையினால் என்னை போஷித்து, கன்மலையின் தேனினால் திருப்தியாக்குவீராக. நான் கேட்பதற்கு முன்பே என் தேவைகளை அறிந்திருக்கிறீர். இன்று, என் இருதயத்தை, என் பிரயாசங்களை, என் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணிக்கிறேன். நான் உம்மை நம்புகிறேன். என்னை வழிநடத்தும்; எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்யும்; என்னை ஆசீர்வதியும். உமது அன்பு ஒருபோதும் ஒழிந்துபோகாததற்காக உம்மை ஸ்தோத்திரித்து, உம்முடைய பரிசுத்தமும் வல்லமையுமான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.