அன்பானவர்களே, இன்றைக்கு, "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே" (1 கொரிந்தியர் 1:20) என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம். இந்த வல்லமையுள்ள வசனத்தின்படி, தேவன் அருளிச்செய்த அத்தனை வாக்குத்தத்தங்களும் கிறிஸ்துவுக்குள் 'ஆம்' என்றும் 'ஆமென்' என்றும் இருக்கிறது. இன்றைக்கு, உங்கள் வாழ்க்கையில் தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டுமென காத்திருக்கலாம். தேவன், உங்களுக்கு பெரிய திட்டத்தைக் கொடுத்திருக்கலாம்; உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லது உங்கள் வேலைக்கு, உங்கள் வியாபாரத்திற்கு அல்லது எதிர்காலத்திற்கு பெரிய வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கலாம். இப்போது நீங்கள் அந்த வாக்குத்தத்தம் உண்மையாய் நிறைவேற காத்திருக்கலாம். நீங்கள் பற்பல போராட்டங்களுக்குள் சென்று கொண்டிருக்கலாம். நீங்கள் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கலாம். எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தோன்றலாம். ஒருவேளை, தேவன் உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குத்தத்தத்தின்மேல் நீங்கள் நம்பிக்கை இழந்திருக்கலாம். ஆனால், நீங்கள் தனிமையில் இல்லை. வேதாகமத்திலும்கூட, நாம் ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறுமா? நிறைவேறாதா என்று சந்தேகப்பட்டதை காண்கிறோம். சாராள், தங்கள் முதிர்வயதில் குழந்தை பிறக்கும்; சந்ததி எண்ணிமுடியாததாய் இருக்கும் என்று சொல்லக் கேட்டபோது நகைத்தாள். நாம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை வெளியே கொண்டு வருவதாக தேவன் கொடுத்த வாக்குக்கொடுத்ததைப் பார்க்கிறோம். அவர்கள், "நாம் எப்போது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை சென்றடைவோம்?" என்று கேட்டிருக்கக்கூடும். தேவன், மேசியா என்னும் இரட்சகரை அவர்களை விடுவிப்பதற்காக வாக்குப்பண்ணியபோது, அது நடக்கக்கூடாத ஒரு விஷயமாக அவர்களுக்கு தோன்றியிருக்கக்கூடும். அவர்கள் சிறையிருப்பிலும் அடிமைத்தனத்திற்குள்ளும் இருந்தார்கள். அவர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் அப்படி ஒரு வாக்குத்தத்தத்தை எப்படி நம்ப முடியும்? இந்த எல்லா நிலைகளிலும் தேவன் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் ஒரு சத்தியத்தை நாம் காண முடியும். ஆம், தேவன் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் அழகிய ஒரு குழந்தையை அவர்களுடைய முதிர்வயதில் கொடுத்தார். ஆபிரகாம், ஜாதிகளுக்கு தந்தையானான். தேவன், இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே நடத்தினார்; அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தார்கள். இறுதியாக, இயேசு வந்தார்; தேவன் வாக்குப்பண்ணிய மேசியாவாக, தம் ஜனங்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக வந்தார். அவர் நம் இரட்சகராக வந்து ஜனங்களை விடுவித்தார். ஒவ்வொரு முறையும் தேவன் தம் ஜனங்களுக்கு ஏதாவது ஒன்றை வாக்குப்பண்ணும்போது, அவர் அவற்றை விட்டுவிடுவதில்லை. அவர் தம் வாக்கினை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருந்தார்.

எங்கள் சொந்த குடும்பத்திலும் ஊழியத்திலும் தேவன் பல வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார்; அவற்றை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராயிருந்தார். வியாதியின் நேரத்தில், பணக்கஷ்டத்தின்போது, வறுமையின்போது எல்லாம் என் தாத்தா Dr.டி.ஜி.எஸ்.தினகரன் மூலமாக ஒரு வாக்கினை தேவன் கொடுப்பார். தேவன், அவர் ஒரு பல்கலைக்கழகத்தை கட்டுவார் என்று வாக்குப்பண்ணினார். அந்த நேரத்தில் அவரது கையில் ஒன்றுமேயில்லை. அது முடியாது என்பதுபோல் காணப்பட்டது. அவ்வளவு பெரிய திட்டம் எப்படி நிறைவேறும்? ஆனால், தேவன், தம் ஊழியருக்குக் கொடுத்த வாக்கினை, திட்டங்களை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருந்தார். இன்றைக்கு காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக, நாட்டிலும், உலக அளவிலும் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெறுகிறார்கள்; உலக அளவில் உயர் பொறுப்புகளில் அமருகிறார்கள். தேவன் எதை வாக்குப்பண்ணினாலும் நம்புவதற்கு அரிதாக இருந்தாலும் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது.

இன்றைக்கு நீங்கள் ஒருவேளை பாடு அனுபவித்துக் கொண்டிருக்கலாம். பண தேவையில் இருக்கலாம். கையில் ஒன்றுமே இல்லாததுபோல் நீங்கள் உணரலாம். புதிய வியாபாரமோ, வாழ்க்கை துணையோ அல்லது எதிர்காலத்தை குறித்தோ தேவன் கொடுத்த வாக்கினை உங்களால் நம்பமுடியாமற்போகலாம். மருத்துவர்கள், நீங்கள் கருத்தரிப்பது முடியாத காரியம் என்று சொல்லலாம். நீங்கள் பிழைத்திருப்பது, இல்லையென்றால் மீள்வது கூடாத காரியம் என்று தோன்றலாம். ஆனால், தேவன் உங்களுக்கு சுகம் தருவேன் என்று வாக்குப்பண்ணியிருந்தால், நிச்சயமாகவே அவர் உங்களை வாழ வைப்பார்; தமது ஆசீர்வாதங்களை அனுபவிக்கப்பண்ணுவார். ஆகவே, இன்றைக்கு தேவனுடைய வாக்கினை பற்றிக்கொள்ளுங்கள்; ஏனெனில் கிறிஸ்துவுக்குள் அவருடைய வாக்குத்தத்தங்கள் ஆம் என்று ஆமென் என்றும் இருக்கிறது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு நீர் உரைத்த வாக்குத்தத்தங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் போராட்டங்களை, பாடுகளை, காத்திருக்குதலை கடந்து சென்றாலும் உம்முடைய வார்த்தை ஒருபோதும் தவறாது என்று நம்ப உதவி செய்யும். நான் சோர்வுற்றிருக்கும்போது என் விசுவாசத்தை பெலப்படுத்தும். நீர் எனக்காக உண்டு பண்ணி வைத்திருக்கிற திட்டங்களை எந்தச் சூழ்நிலையாலும் மாற்ற முடியாது; உம்முடைய பரிபூரண வேளையில் நீர் அவற்றை செய்வீர் எனறு எனக்கு நினைவுப்படுத்தும். ஆண்டவரே, நான் உம்முடைய உண்மையை பற்றிக்கொண்டிருக்கிறேன். நாள்தோறும் நீரே எல்லாவற்றின் பின்னணியிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர் என்ற திடநம்பிக்கையுடன் நடப்பதற்கு உதவி செய்யும்.  என் வாழ்க்கையில் உமது வாக்குத்தத்தங்கள் நிறைவேறி உமக்கு மகிமையை கொண்டு வர வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.