அன்பானவர்களே, இன்று தேவன் பெரிய காரியத்தை உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார். "நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்" (ஆகாய் 2:19) என்று ஆண்டவர் கூறுகிறார். இது எவ்வளவு பெரிய தைரியம்! ஆகாய் புஸ்தகத்தின் பின்னணியைப் பார்த்தோமானால், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் இருதயங்களில் தேவனுக்கு இடம் கொடுக்கவில்லை.
தேவன், "இருதயத்தில் எனக்கு இடம் தராத நிலையில் நான் எப்படி வந்து உங்களை ஆசீர்வதிப்பேன்?" என்று கேட்கிறார். ஆண்டவர் ஏமாற்றமடைந்திருக்கிறார். கர்த்தர், "திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே" என்று கூறுகிறார். ஆனால், காரியம் மாறுதலாய் முடிகிறது. ஆண்டவர், "உன் இருதயத்தை எனக்குத் தந்தபடியால், இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உன்னை ஆசீர்வதிக்கவேண்டுமென்ற இருதயத்துடன் வருகிறேன்," என்று கூறுகிறார்.
இப்படித்தான் பேதுருவுக்கும் அவர் செய்தார். பேதுரு, தானாக சொந்தமாக எல்லாவற்றையும் முயற்சித்தான்; கடினமாக உழைத்தான்; கனி கொடுக்கவும், ஆசீர்வாதமாக விளங்கவும் பிரயாசப்பட்டான். ஆனால், அவை அத்தனையும் வீணாய் போனது. எவ்வளவோ பிரயாசப்பட்டும் ஒரு மீனவனான அவனால் ஒரு மீனைகூட பிடிக்க இயலவில்லை. அப்போது இயேசு வந்தார். அவர் பேதுருவிடம், "உன் இருதயத்தை எனக்குத் தா. உன் வாழ்க்கையை எனக்குத் தா. என்னைப் பின்பற்று," என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? இயேசு, "நான் உன்னை கனிகொடுக்கும்படி செய்வேன்," என்கிறார். பேதுரு, ஏராளமான மீன்களைப் பிடித்தான்; பின்னர் தேவ ராஜ்யத்திற்கென்று ஏராளமான மனுஷரை பிடித்தான். தேவன், பேதுருவின் வாழ்க்கையை ஒன்றுமில்லாமையிலிருந்து செழிக்கும்படி ஆசீர்வதித்தார்.
உங்கள் நிலையும்கூட அப்படியிருக்கலாம். இன்றுமுதல் நான் உங்களை ஆசீர்வதிப்பேன் என்கிறார். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் இருதயத்தை அவரிடம் ஒப்படைப்பீர்களா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றுமுதல் என்னை ஆசீர்வதிப்பேன் என்று நீர் கொடுத்த வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என் இருதயத்தை உமக்கு திறந்து கொடுக்கிறேன். உமக்கு என் இருதயத்தின் முழு இடத்தையும் கொடுக்காமல் வாழ்ந்த காலத்திற்கு என்னை மன்னித்தருளும். என் இருதயத்திற்குள் வாரும்; அதை நீர் வாசம்பண்ணும் ஸ்தலமாக மாற்றும். பேதுருவின் காலியான வலைகளை பரிபூரண ஆசீர்வாதத்தால் நிரப்பியதுபோல, என் வாழ்க்கையை, என் முயற்சிகளை, என் போராட்டங்களை, என் குடும்பத்தையும் எடுத்து அவற்றுக்குள் உம்முடைய ஆசீர்வாதத்தை ஊதுவீராக. எல்லாவற்றையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். முழு மனதோடு உம்முடைய நன்மையும் கிருபையும் என்னை தொடரட்டும். இன்றுமுதல் உம்முடைய ஆசீர்வாதம் என்மேல் தங்கவேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.